Tag: எட்டுத்தொகை

  • எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

    புறநானூறு

    எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
    விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
    விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
    மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
    தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
    தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
    விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
    பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
    சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
    வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
    என்னா வதுகொல் தானே கழனி
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
    யாணர் அறாஅ வைப்பின்
    காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

    பரணர்

  • வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்

    புறநானூறு

    வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழுநோன்தாள்
    அணங்குஅருங் கடுந்திறல் என்ஐ முணங்கு நிமிர்ந்து
    அளைச்செறி உழுவை இரைக்குவந் தன்ன
    மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்தெழுந்து
    விழுமியம் பெரியம் யாமே நம்மிற்
    பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என
    எள்ளி வந்த வம்ப மள்ளர்
    புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
    ஈண்டுஅவர் அடுதலும் ஒல்லான் ஆண்டுஅவர்
    மாண்இழை மகளிர் நாணினர் கழியத்
    தந்தை தம்மூர் ஆங்கண்
    தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டு அட்டனனே

    இடைக்குன்றூர் கிழார்

  • வருதார் தாங்கி அமர்மிகல் யாவது

    புறநானூறு

    வருதார் தாங்கி அமர்மிகல் யாவது
    பொருது ஆண்டொழிந்த மைந்தர் புண்தொட்டுக்
    குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி
    நிறம்கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர்
    எடுத்துஎறி அனந்தற் பறைச்சீர் தூங்கப்
    பருந்து அருந்துற்ற தானையடு செருமுனிந்து
    அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர்
    தாம்மாய்ந் தனரே குடைதுளங் கினவே
    உரைசால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே
    பன்னூறு அடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம்
    இடம்கெட ஈண்டிய வியன்கண் பாசறைக்
    களங்கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர
    உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்
    பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்
    மார்பகம் பொருந்தி ஆங்கமைந் தன்றே
    வாடாப் பூவின் இமையா நாட்டத்து
    நாற்ற உணவினோரும் ஆற்ற
    அரும்பெறல் உலகம் நிறைய
    விருந்துபெற் றனரால் பொலிக நும் புகழே

    கழாத் தலையார்

  • கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்

    புறநானூறு

    கிண்கிணி களைந்த கால் ஒண் கழல்தொட்டுக்
    குடுமி களைந்து நுதல்வேம்பின் ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
    குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
    நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்
    யார்கொல் வாழ்க அவன் கண்ணி தார்பூண்டு
    தாலி களைந்தன்றும் இலனே பால்விட்டு
    அயினியும் இன்று அயின்றனனே வயின் வயின்
    உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
    வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை
    அழுந்தப்பற்றி அகல்விசும்பு ஆர்ப்புஎழக்
    கவிழ்ந்து நிலம் சேர அட்டதை
    மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே

    இடைக்குன்றூர் கிழார்

  • கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்

    புறநானூறு

    கொண்டைக் கூழைத் தண்டழைக் கடைசியர்
    சிறுமாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும்
    மலங்கு மிளிர் செறுவின் தளம்புதடிந் திட்ட
    பழன வாளைப் பரூஉக்கண் துணியல்
    புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக
    விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி
    நீடுகதிர்க் கழனிச் சூடுதடு மாறும்
    வன்கை வினைஞர் புன்தலைச் சிறாஅர்
    தெங்குபடு வியன்பழம் முனையின் தந்தையர்
    குறைக்கண் நெடுபோர் ஏறி விசைத் தெழுந்து
    செழுங்கோட் பெண்ணைப் பழந்தொட முயலும்
    வைகல் யாணர் நன்னாட்டுப் பொருநன்
    எ·குவிளங்கு தடக்கை இயல்தேர்ச் சென்னி
    சிலைத்தார் அகலம் மலைக்குநர் உளர்எனின்
    தாமறி குவர்தமக்கு உறுதி யாம் அவன்
    எழுஉறழ் திணிதோள் வழுவின்றி மலைந்தோர்
    வாழக் கண்டன்றும் இலமே தாழாது
    திருந்து அடி பொருந்த வல்லோர்
    வருந்தக் காண்டல் அதனினும் இலமே

    மதுரைக் குமரனார்

  • ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

    புறநானூறு

    ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
    புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை
    இன்றின் ஊங்கோ கேளலம் திரளரை
    மன்ற வேம்பின் மாச்சினை ஒண்தளிர்
    நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து
    செறியத் தொடுத்த தேம்பாய் கண்ணி
    ஒலியல் மாலையடு பொலியச் சூடிப்
    பாடின் தெண்கிணை கறங்கக் காண்தக
    நாடுகெழு திருவிற் பசும்பூட் செழியன்
    பீடும் செம்மலும் அறியார் கூடிப்
    பொருதும் என்று தன்தலை வந்த
    புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
    ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே

    இடைக்குன்றூர் கிழார்

  • முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்

    புறநானூறு

    முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
    செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
    உச்சி நின்ற வுவவுமதி கண்டு
    கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
    சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
    தொழுதன மல்லமோ பலவே கானற்
    கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
    ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
    உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
    வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
    வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
    மாலை வெண்குடை யொக்குமா லெனவே

    தாமோதரனார்

  • மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்

    புறநானூறு

    மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
    பால்தர வந்த பழவிறல் தாயம்
    எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என
    குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
    சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே
    மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
    விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ்நீர்
    அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
    என்றூழ் வாடுவறல் போல நன்றும்
    நொய்தால் அம்ம தானே-மையற்று
    விசும்புஉற ஓங்கிய வெண்குடை
    முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே

    நலங்கிள்ளி

  • குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

    புறநானூறு

    குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
    ஆள் அன்று என்று வாளின் தப்பார்
    தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
    கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி வயிற்றுத் தீத் தணியத்
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்ம ரோ இவ் உலகத் தானே

    சேரமான் கணைக்கா லிரும்பொறை

  • இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்

    புறநானூறு

    இழை யணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
    மடவரல் உண்கண் வாள்நதல் விறலி
    பொருநரும் உளரோ நும் அகன்றலை நாட்டு என
    வினவல் ஆனாப் பொருபடை வேந்தே
    எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
    சிறுவன் மள்ளரும் உளரே அதாஅன்று
    பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
    வளி பொரு தெண்கண் கேட்பின்
    அது போர் என்னும் என்னையும் உளனே

    ஔவையார்