Author: Pulan

  • நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

    புறநானூறு

    நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
    முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
    கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
    தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
    நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
    இளைய தாயினுங் கிளையரா வெறியும்
    அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
    செருமாண் பஞ்சவ ரேறே நீயே
    அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
    நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
    வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
    இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
    தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
    பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
    நீனிற வுருவி னேமி யோனுமென்
    றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
    குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
    இன்னீ ராகலி னினியவு முளவோ
    இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
    ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
    உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
    பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய்யா காதே
    அதனால், நல்ல போலவு நயவ போலவும்
    தொல்லோர் சென்ற நெறிய போலவும்
    காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
    ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
    தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
    றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
    கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
    நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
    குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே

    காரிக்கண்ணனார்

  • வல்லா ராயினும் வல்லுந ராயினும்

    புறநானூறு

    வல்லா ராயினும் வல்லுந ராயினும்
    புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
    உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
    நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
    நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
    டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
    நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
    மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
    ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
    கடிமரந் தடித லோம்புநின்
    நெடுநல் யானைக் கந்தாற் றாவே

    காரிக்கண்ணனார்

  • ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை

    புறநானூறு

    ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
    மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
    கடல்வளர் புரிவளை புரையு மேனி
    அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
    மண்ணுறு திருமணி புரையு மேனி
    விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
    மணிமயி லுயரிய மாறா வென்றிப்
    பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
    ஞாலங் காக்குங் கால முன்பிற்
    றோலா நல்லிசை நால்வ ருள்ளும்
    கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
    வலியொத் தீயே வாலி யோனைப்
    புகழொத் தீயே முன்னியது முடித்தலின்
    முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
    ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும்
    அரியவு முளவோ நினக்கே யதனால்
    இரவலர்க் கருங்கல மருகா தீயா
    யவனர் நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
    பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
    ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்
    தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
    அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
    வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
    தண்கதிர் மதியம் போலவும்
    நின்று நிலைஇய ருலகமோ டுடனே

    நக்கீரனார்

  • எங்கோ னிருந்த கம்பலை மூதூர்

    புறநானூறு

    எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
    உடையோர் போல விடையின்று குறுகிச்
    செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
    எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
    5இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து
    வான நாண வரையாது சென்றோர்க்
    கானா தீயுங் கவிகை வண்மைக்
    கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
    நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
    பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி
    மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
    சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
    புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
    வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே

    மதுரைக்குமரன்

  • அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

    புறநானூறு

    அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
    முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
    ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
    தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
    வடபுல மன்னர் வாட வடல்குறித்
    தின்னா வெம்போ ரியறேர் வழுதி
    இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
    தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
    மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
    வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
    பெருநல் யாணரி னொரீஇ யினியே
    கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
    பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
    நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
    வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
    கான வாரண மீனும்
    காடாகி விளியு நாடுடை யோரே

    மருதினிள நாகனார்

  • நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

    புறநானூறு

    நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
    மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
    வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
    கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
    தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
    கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
    கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
    அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
    நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
    செம்புற் றீயல் போல
    ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

    ஐயூர் முடவனார்

  • மாசற விசித்த வார்புஉறு வள்பின்

    புறநானூறு

    மாசற விசித்த வார்புஉறு வள்பின்
    மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
    ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்
    பொலங்குழை உழிஞையடு பொலியச் சூட்டிக்
    குருதி வேட்கை உருகெழு முரசம்
    மண்ணி வாரா அளவை எண்ணெய்
    நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
    அறியாது ஏறிய என்னைத் தெறுவர
    இருபாற் படுக்குநின் வாள்வாய் ஒழித்ததை
    அதூஉம் சாலும் நற் றமிழ்முழுது அறிதல்
    அதனொடும் அமையாது அணுக வந்து நின்
    மதனுடை முழவுத்தோள் ஓச்சித் தண்ணென
    வீசி யோயே வியலிடம் கமழ
    இவன்இசை உடையோர்க்கு அல்லது அவணது
    உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை
    விளங்கக் கேட்ட மாறுகொல்
    வலம்படு குருசில் நீ ஈங்குஇது செயலே

    மோசிகீரனார்

  • நாடன் என்கோ ஊரன் என்கோ

    புறநானூறு

    நாடன் என்கோ ஊரன் என்கோ
    பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்பன் என்கோ
    யாங்கனம் மொழிகோ ஓங்குவாள் கோதையை
    புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே

    பொய்கையார்

  • காலனும் காலம் பார்க்கும் பாராது

    புறநானூறு

    காலனும் காலம் பார்க்கும் பாராது
    வேல்ஈண்டு தானை விழுமியோர் தொலைய
    வேண்டிடத்து அடூஉம் வெல்போர் வேந்தே
    திசைஇரு நான்கும் உற்கம் உற்கவும்
    பெருமரத்து இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவும்
    வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
    அஞ்சுவரத் தகுந புள்ளுக்குரல் இயம்பவும்
    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்
    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்
    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்
    கனவின் அரியன காணா நனவின்
    செருச்செய் முன்ப நின் வருதிறன் நோக்கி
    மையல் கொண்ட ஏமம்இல் இருக்கையர்
    புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்கு
    எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களடு
    பெருங்கலக் குற்றன்றால் தானே காற்றோடு
    எரிநிகழ்ந் தன்ன செலவின்
    செருமிகு வளவ நிற் சினைஇயோர் நாடே

    கோவூர் கிழார்

  • நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

    புறநானூறு

    நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை வய வேந்தே
    யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
    இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

    ஆவூர் மூலங்கிழார்