புறநானூறு
வாள்வலந்தர மறுப் பட்டன
செவ் வானத்து வனப்புப் போன்றன
தாள் களங்கொளக் கழல் பறைந்தன
கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
கறுழ் பொருத செவ் வாயான்
எருத்து வவ்விய புலி போன்றன
களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
நுதி மழுங்கிய வெண் கோட்டான்
உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
மாக் கடல் நிவந் தெழுதரும்
செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
அனையை ஆகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே
பரணர்