Tag: புறம்

  • சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

    புறநானூறு

    சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
    நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
    வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
    வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
    உரையும் பாட்டும் உடையோர் சிலரே
    மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
    புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான ஊர்தி
    எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
    கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
    தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
    மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
    அறியா தோரையும் அறியக் காட்டித்
    திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
    வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
    அருள வல்லை ஆகுமதி அருளிலர்
    கொடா அமை வல்லர் ஆகுக
    கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • நளி கடல் இருங் குட்டத்து

    புறநானூறு

    நளி கடல் இருங் குட்டத்து
    வளி புடைத்த கலம் போலக்
    களிறு சென்று களன் அகற்றவும்
    களன் அகற்றிய வியல் ஆங்கண்
    ஒளிறு இலைய எஃகு ஏந்தி
    அரைசு பட அமர் உழக்கி
    உரை செல முரசு வெளவி
    முடித் தலை அடுப் பாகப்
    புனல் குருதி உலைக் கொளீஇத்
    தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
    அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
    ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்னர் ஏவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
    நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
    மாற்றார் என்னும் பெயர் பெற்று
    ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

    மாங்குடி கிழவர்

  • மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

    புறநானூறு

    மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
    ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
    உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
    நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
    உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
    அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்
    பிணியுறு முரசம் கொண்ட காலை
    நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
    சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய
    முலைபொலி அகம் உருப்ப நூறி
    மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
    ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர
    அவிர் அறல் கடுக்கும் அம் மென்
    குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே

    கல்லாடனார்

  • நெல் அரியும் இருந் தொழுவர்

    புறநானூறு

    நெல் அரியும் இருந் தொழுவர்
    செஞ் ஞாயிற்று வெயில் முனையின்
    தென் கடல்திரை மிசைப்பா யுந்து
    திண் திமில் வன் பரதவர்
    வெப் புடைய மட் டுண்டு
    தண் குரவைச் சீர்தூங் குந்து
    தூவற் கலித்த தேம்பாய் புன்னை
    மெல்லிணர்க் கன்ணி மிலைந்த மைந்தர்
    எல்வளை மகளிர்த் தலைக்கை தரூஉந்து
    வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல்
    முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர்
    இரும் பனையின் குரும்பை நீரும்
    பூங் கரும்பின் தீஞ் சாறும்
    ஓங்கு மணற் குலவுத் தாழைத்
    தீ நீரோடு உடன் விராஅய்
    முந்நீர் உண்டு முந்நீர்ப் பாயும்
    தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய
    ஒம்பா ஈகை மாவேள் எவ்வி
    புனலம் புதவின் மிழலையடு_ கழனிக்
    கயலார் நாரை போர்வில் சேக்கும்
    பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
    குப்பை நெல்லின் முத்தூறு தந்த
    கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
    நின்று நிலைஇயர் நின் நாண்மீன் நில்லாது
    படாஅச் செலீஇயர் நின்பகைவர் மீனே
    நின்னொடு தொன்றுமூத்த உயிரினும் உயிரொடு
    நின்று மூத்த யாக்கை யன்ன நின்
    ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
    வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
    இரவன் மாக்கள் ஈகை நுவல
    ஒண்டொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்து
    ஆங்குஇனிது ஒழுகுமதி பெரும ஆங்கது
    வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல்லிசை
    மலர்தலை உலகத்துத் தோன்றிப்
    பலர்செலச் செல்லாது நின்று விளிந் தோரே

    மாங்குடி கிழவர்

  • வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்

    புறநானூறு

    வெளிறில் நோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
    களிறுபடிந்து உண்டெனக் கலங்கிய துறையும்
    கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்
    சூர்நவை முருகன் சுற்றத்து அன்ன நின்
    கூர்நல் அம்பின் கொடுவில் கூளியர்
    கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
    கொள்பதம் ஒழிய வீசிய புலனும்
    வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்
    கடிமரம் துளங்கிய காவும் நெடுநகர்
    வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்
    கனைஎரி உரறிய மருங்கும் நோக்கி
    நண்ணார் நாண நாள்தொறும் தலைச்சென்று
    இன்னும் இன்னபல செய்குவன் யாவரும்
    துன்னல் போகிய துணிவினோன் என
    ஞாலம் நெளிய ஈண்டிய வியன்படை
    ஆலங் கானத்து அமர்கடந்து அட்ட
    கால முன்ப நின் கண்டனென் வருவல்
    அறுமருப்பு எழிற்கலை புலிப்பால் பட்டெனச்
    சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
    பூளை நீடிய வெருவரு பறந்தலை
    வேளை வெண்பூக் கறிக்கும்
    ஆளில் அத்தம் ஆகிய காடே

    கல்லாடனார்

  • வரை புரையும் மழகளிற்றின் மிசை

    புறநானூறு

    வரை புரையும் மழகளிற்றின் மிசை
    வான் துடைக்கும் வகைய போல
    விரவு உருவின கொடி நுடங்கும்
    வியன் தானை விறல் வேந்தே
    நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
    நீ நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
    செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்
    வெண் திங்களுள் வெயில் வேண்டினும்
    வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்
    நின்நிழல் பிறந்து நின்நிழல் வளர்ந்த
    எம் அளவு எவனோ மற்றே இன்நிலைப்
    பொலம்பூங் காவின் நன்னாட் டோரும்
    செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை
    உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
    கடவ தன்மையின் கையறவு உடைத்து என
    ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
    நின்நாடு உள்ளுவர் பரிசிலர்
    ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தெனவே

    ஆவூர் மூலங் கிழார்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    புறநானூறு

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னாது என்றலும் இலமே மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ ஆனாது
    கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

    கணியன் பூங்குன்றன்

  • நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த

    புறநானூறு

    நஞ்சுடை வால் எயிற்று ஐந்தலை சுமந்த
    வேக வெந்திறல் நாகம் புக்கென
    விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
    பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்குப்
    புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்
    சினங்கெழு தானைச் செம்பியன் மருக
    கராஅம் கலித்த குண்டுகண் அகழி
    இடம்கருங் குட்டத்து உடந்தொக்கு ஓடி
    யாமம் கொள்பவர் சுடர்நிழல் கதூஉம்
    கடுமுரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்
    செம்புஉறழ் புரிசைச் செம்மல் மூதூர்
    வம்புஅணி யானை வேந்துஅகத் துண்மையின்
    நல்ல என்னாது சிதைத்தல்
    வல்லையால் நெடுந்தகை செருவத் தானே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கண்ணி கார் நறுங்கொன்றை காமர்

    புறநானூறு

    கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
    வண்ண மார்பின் தாருங் கொன்றை
    ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
    சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப
    கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
    மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
    பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
    தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
    பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
    பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
    எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
    நீரறவு அறியாக் கரகத்துத்
    தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே

    பெருந்தேவனார்

  • அடுநை யாயினும் விடுநை யாயினும்

    புறநானூறு

    அடுநை யாயினும் விடுநை யாயினும்
    நீ அளந் தறிதி நின் புரைமை வார்தோல்
    செயறியரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
    பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
    தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்
    கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
    நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து
    வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
    கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
    நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப
    ஆங்குஇனி திருந்த வேந்தனொடு ஈங்குநின்
    சிலைத்தார் முரசும் கறங்க
    மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே

    ஆலத்தூர் கிழார்