புறநானூறு
கண்ணி கார் நறுங்கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த
சீர் கெழு கொடியும் அவ்வேறு என்ப
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரறவு அறியாக் கரகத்துத்
தாழ் சடைப் பொலிந்த அருந்தவத்தோற்கே
பெருந்தேவனார்