Author: Pulan

  • அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ

    புறநானூறு

    அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
    முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
    ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
    தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
    வடபுல மன்னர் வாட வடல்குறித்
    தின்னா வெம்போ ரியறேர் வழுதி
    இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
    தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
    மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
    வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும்
    பெருநல் யாணரி னொரீஇ யினியே
    கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
    பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
    நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
    வல்லி னல்லக நிறையப் பல்பொறிக்
    கான வாரண மீனும்
    காடாகி விளியு நாடுடை யோரே

    மருதினிள நாகனார்

  • கோதை மார்பிற் கோதை யானும்

    புறநானூறு

    கோதை மார்பிற் கோதை யானும்
    கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
    மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
    கள்நா றும்மே கானல்அம் தொண்டி
    அஃதுஎம் ஊரே அவன்எம் இறைவன்
    எம்மும் உள்ளுமோ முதுவாய் இரவல
    அமர்மேம் படூஉங் காலை நின்
    புகழ்மேம் படுநனைக் கண்டனம் எனவே

    பொய்கையார்

  • வல்லா ராயினும் வல்லுந ராயினும்

    புறநானூறு

    வல்லா ராயினும் வல்லுந ராயினும்
    புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
    உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
    நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
    நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
    டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
    நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
    மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
    ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
    கடிமரந் தடித லோம்புநின்
    நெடுநல் யானைக் கந்தாற் றாவே

    காரிக்கண்ணனார்

  • நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்

    புறநானூறு

    நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
    மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
    வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
    கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
    தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன் போரெதிர்ந்து
    கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
    கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
    அளியரோ வளியரவ னிளியிழந் தோரே
    நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
    செம்புற் றீயல் போல
    ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே

    ஐயூர் முடவனார்

  • நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்

    புறநானூறு

    நீயே பிறர் ஓம்புறு மறமன் னெயில்
    ஓம்பாது கடந்தட்டு அவர்
    முடி புனைந்த பசும் பொன்னின்
    அடி பொலியக் கழல் தைஇய
    வல் லாளனை வய வேந்தே
    யாமே நின் இகழ் பாடுவோர் எருத்தடங்கப்
    புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற
    இன்றுகண் டாங்குக் காண்குவம் என்றும்
    இன்சொல் எண்பதத்தை ஆகுமதி பெரும
    ஒருபிடி படியுஞ் சீறிடம்
    எழுகளிறு புரக்கும் நாடுகிழ வோயே

    ஆவூர் மூலங்கிழார்

  • முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்

    புறநானூறு

    முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
    கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
    திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
    விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
    களங்கொள் யானைக் கடுமான் பொறைய
    விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
    மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
    கைம்முற் றலநின் புகழே யென்றும்
    ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
    வாழே மென்றலு மரிதே தாழாது
    செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
    வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
    இன்றுள னாயி னன்றும னென்றநின்
    ஆடுகொள் வரிசைக் கொப்பப்
    பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே

    பொருந்திலிளங்கீரனார்

  • நீயே தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே

    புறநானூறு

    நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
    முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
    கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
    தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
    நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ
    இளைய தாயினுங் கிளையரா வெறியும்
    அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
    செருமாண் பஞ்சவ ரேறே நீயே
    அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
    நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென
    வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
    இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
    தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
    பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
    நீனிற வுருவி னேமி யோனுமென்
    றிருபெருந் தெய்வமு முடனின் றாஅங்
    குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
    இன்னீ ராகலி னினியவு முளவோ
    இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
    ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவீரும்
    உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
    பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
    கையகப் படுவது பொய்யா காதே
    அதனால், நல்ல போலவு நயவ போலவும்
    தொல்லோர் சென்ற நெறிய போலவும்
    காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
    ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
    தின்றே போல்கநும் புணர்ச்சி வென்றுவென்
    றடுகளத் துயர்கநும் வேலே கொடுவரிக்
    கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
    நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
    குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே

    காரிக்கண்ணனார்

  • வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி

    புறநானூறு

    வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி
    நெடிய என்னாது சுரம்பல கடந்து
    வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
    பெற்றது மகழ்ந்தும் சுற்றம் அருத்தி
    ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கை
    பிறர்க்குத் தீதறிந் தன்றோ இன்றே திறம்பட
    நண்ணார் நாண அண்ணாந்து ஏகி
    ஆங்குஇனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ்
    மண்ணாள் செல்வம் எய்திய
    நும்மோர் அன்ன செம்மலும் உடைத்தே

    கோவூர் கிழார்

  • ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்

    புறநானூறு

    ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின்
    யானையும் மலையின் தோன்றும் பெரும நின்
    தானையும் கடலென முழங்கும் கூர்நுனை
    வேலும் மின்னின் விளங்கும் உலகத்து
    அரைசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின்
    புரைதீர்ந் தன்று அது புதுவதோ அன்றே
    தண்புனற் பூசல் அல்லது நொந்து
    களைக வாழி வளவ என்று நின்
    முனைதரு பூசல் கனவினும் அறியாது
    புலிபுறங் காக்கும் குருளை போல
    மெலிவில் செங்கோல் நீபுறங் காப்பப்
    பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
    கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
    படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
    கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
    நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
    வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
    மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந
    மலையின் இழிந்து மாக்கடல் நோக்கி
    நிலவரை இழிதரும் பல்யாறு போலப்
    புலவ ரெல்லாம் நின்நோக் கினரே
    நீயே மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
    கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
    மாற்றுஇரு வேந்தர் மண்நோக் கினையே

    இடைக்காடனார்

  • எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி

    புறநானூறு

    எனைப்பல் யானையும் அம்பொடு துளங்கி
    விளைக்கும் வினையின்றிப் படைஒழிந் தனவே
    விறற் புகழ் மாண்ட புரவி எல்லாம்
    மறத் தகை மைந்தரொடு ஆண்டுப்பட் டனவே
    தேர்தர வந்த சான்றோர் எல்லாம்
    தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே
    விசித்து வினை மாண்ட மயிர்க்கண் முரசம்
    பொறுக்குநர் இன்மையின் இருந்துவிளிந் தனவே
    சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென
    வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே
    என்னா வதுகொல் தானே கழனி
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    பாசவல் முக்கித் தண்புனல் பாயும்
    யாணர் அறாஅ வைப்பின்
    காமர் கிடக்கை அவர் அகன்றலை நாடே

    பரணர்