Tag: புறம்

  • கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

    புறநானூறு

    கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
    மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
    தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
    ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
    குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
    ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
    பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
    பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
    தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
    புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
    மலரா மாலைப் பந்துகண் டன்ன
    ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
    செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை
    வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
    அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
    காம இருவர் அல்லது யாமத்துத்
    தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
    ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
    வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
    நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே

    கோவூர்கிழார்

  • கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

    புறநானூறு

    கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
    பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
    வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
    ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
    மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
    பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
    தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
    வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
    பசுமண் குரூஉத்திரள் போல அவன்
    கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

    கோவூர்கிழார்

  • சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

    புறநானூறு

    சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
    அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
    இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
    உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
    நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
    பாசறை யல்லது நீயல் லாயே
    நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
    கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
    போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
    காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய
    செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
    விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
    குண கடல் பின்ன தாகக் குட கடல்
    வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப
    வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
    நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்
    துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே

    கோவூர்கிழார்

  • செஞ்ஞா யிற்றுச் செலவும்

    புறநானூறு

    செஞ்ஞா யிற்றுச் செலவும்
    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
    பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
    வளி திரிதரு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்
    இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
    அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
    களிறுகவுள் அடுத்த எறிகல் போல
    ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
    யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
    மீப்பாய் களையாது மிசைப் பரந் தோண்டாது
    புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
    இடைப்புலப் பெருவழிச் சொரியும்
    கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • அழல் புரிந்த அடர் தாமரை

    புறநானூறு

    அழல் புரிந்த அடர் தாமரை
    ஐது அடர்ந்ற நூற் பெய்து
    புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
    பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்
    பாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை
    பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
    தோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க
    முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்பக்
    கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்குஅளித்தலும்
    ஒடியா முறையின் மடிவிலை யாகி
    நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
    இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்
    நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
    ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு
    வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
    இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
    பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
    பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
    கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
    சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
    உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
    ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
    கோடியர் நீர்மை போல முறை முறை
    ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
    நகைப் புறனாக நின் சுற்றம்
    இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

    புறநானூறு

    சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
    கூனும் குறளும் ஊமும் செவிடும்
    மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
    எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
    பேதைமை அல்லது ஊதியம் இல் என
    முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
    அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது-
    வட்ட வரிய செம்பொறிச் சேவல்
    ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
    கானத் தோர் நின் தெவ்வர் நீயே
    புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
    புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
    பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
    ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே
    அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
    ஆற்றும் பெரும நின்செல்வம்
    ஆற்றாமை நின் போற்றா மையே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்

    புறநானூறு

    சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
    நூற் றிதழ் அலரின் நிறை கண் டன்ன
    வேற்றுமை இல்லா விழுத்திணைப் பிறந்து
    வீற்றிருந் தோரை எண்ணுங் காலை
    உரையும் பாட்டும் உடையோர் சிலரே
    மரைஇலை போல மாய்ந்திசினோர் பலரே
    புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
    வலவன் ஏவா வான ஊர்தி
    எய்துப என்ப தம் செய்வினை முடித்து எனக்
    கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி
    தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
    மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
    அறியா தோரையும் அறியக் காட்டித்
    திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து
    வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்
    வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி
    அருள வல்லை ஆகுமதி அருளிலர்
    கொடா அமை வல்லர் ஆகுக
    கெடாஅத் துப்பின்நின் பகைஎதிர்ந் தோரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • நளி கடல் இருங் குட்டத்து

    புறநானூறு

    நளி கடல் இருங் குட்டத்து
    வளி புடைத்த கலம் போலக்
    களிறு சென்று களன் அகற்றவும்
    களன் அகற்றிய வியல் ஆங்கண்
    ஒளிறு இலைய எஃகு ஏந்தி
    அரைசு பட அமர் உழக்கி
    உரை செல முரசு வெளவி
    முடித் தலை அடுப் பாகப்
    புனல் குருதி உலைக் கொளீஇத்
    தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின்
    அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய
    ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
    நான்மறை முதல்வர் சுற்ற மாக
    மன்னர் ஏவல் செய்ய மன்னிய
    வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே
    நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
    மாற்றார் என்னும் பெயர் பெற்று
    ஆற்றார் ஆயினும் ஆண்டுவாழ் வோரே

    மாங்குடி கிழவர்

  • மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல

    புறநானூறு

    மீன்திகழ் விசும்பின் பாய்இருள் அகல
    ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
    உரவுச்சினம் திருகிய உருகெழு ஞாயிறு
    நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்கு
    உடலருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை
    அணங்கரும் பறந்தலை உணங்கப் பண்ணிப்
    பிணியுறு முரசம் கொண்ட காலை
    நிலைதிரிபு எறியத் திண்மடை கலங்கிச்
    சிதைதல் உய்ந்தன்றோ நின்வேல் செழிய
    முலைபொலி அகம் உருப்ப நூறி
    மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
    ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர
    அவிர் அறல் கடுக்கும் அம் மென்
    குவை யிரும் கூந்தல் கொய்தல் கண்டே

    கல்லாடனார்

  • வல்லா ராயினும் வல்லுந ராயினும்

    புறநானூறு

    வல்லா ராயினும் வல்லுந ராயினும்
    புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
    உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
    நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
    நீயே பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
    டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
    நனந்தலைப் பேரூ ரெரியு நைக்க
    மின்னுநிமர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
    ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
    கடிமரந் தடித லோம்புநின்
    நெடுநல் யானைக் கந்தாற் றாவே

    காரிக்கண்ணனார்