Tag: புறநானூறு

  • வாள் வலந்தர மறுப் பட்டன

    புறநானூறு

    வாள்வலந்தர மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன
    தாள் களங்கொளக் கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
    தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
    மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
    கறுழ் பொருத செவ் வாயான்
    எருத்து வவ்விய புலி போன்றன
    களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
    நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
    மாக் கடல் நிவந் தெழுதரும்
    செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
    அனையை ஆகன் மாறே
    தாயில் தூவாக் குழவி போல
    ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

    பரணர்

  • இரு முந்நீர்க் குட்டமும்

    புறநானூறு

    இரு முந்நீர்க் குட்டமும்
    வியன் ஞாலத்து அகலமும்
    வளி வழங்கு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
    அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
    அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
    சோறு படுக்கும் தீயோடு
    செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
    பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே
    திருவில் அல்லது கொலைவில் அறியார்
    நாஞ்சில் அல்லது படையும் அறியார்
    திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
    பிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
    வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
    பகைவர் உண்ணா அருமண் ணினையே
    அம்பு துஞ்சும்கடி அரணால்
    அறம் துஞ்சும் செங்கோலையே
    புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
    விதுப்புற அறியா ஏமக் காப்பினை
    அனையை ஆகல் மாறே
    மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே

    குறுங்கோழியூர்கிழார்

  • எருமை அன்ன கருங்கல் இடை தோறு

    புறநானூறு

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு
    ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
    கானக நாடனைநீயோ பெரும
    நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
    அருளும் அன்பும் நீக்கி நீங்கா
    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
    குழவி கொள் பவரின் ஓம்புமதி
    அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

    நரிவெரூஉத் தலையார்

  • புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்

    புறநானூறு

    புலவரை இறந்த புகழ்சால் தோன்றல்
    நிலவரை இறந்த குண்டுகண் அகழி
    வான்தோய் வன்ன புரிசை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவ ஞாயில்
    கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
    அருங் குறும்பு உடுத்த கானப்பேர் எயில்
    கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
    இரும்புஉண் நீரினும் மீட்டற்கு அரிதுஎன
    வேங்கை மார்பின் இரங்க வைகலும்
    ஆடுகொளக் குழைந்த தும்பைப் புலவர்
    பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
    இகழுநர் இசையடு மாயப்
    புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே

    ஐயூர் மூலங்கிழார்

  • வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

    புறநானூறு

    வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
    தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
    குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்
    குடாஅது தொன்றுமுதிர் பொளவத்தின் குடக்கும்
    கீழது முப்புணர் அடுக்கிய முறைமுதற் கட்டின்
    நீர்நிலை நிவப்பின் கீழும் மேலது
    ஆனிலை உலகத் தானும் ஆனாது
    உருவும் புகழும் ஆகி விரிசீர்த்
    தெரிகோல் ஞமன்ன் போல ஒரு திறம்
    பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க
    செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
    கடற்படை குளிப்ப மண்டி அடர்ப் புகர்ச்
    சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்
    பாசவற் படப்பை ஆர்எயில் பலதந்து
    அவ்வெயில் கொண்ட செய்வுறு நன்கலம்
    பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்
    பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
    முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
    இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
    நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே
    வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
    நாடுசுடு கமழ்புகை எறித்த லானே
    செலிஇயர் அத்தை நின் வெகுளி வால்இழை
    மங்கையர் துனித்த வாள்முகத்து எதிரே
    ஆங்க வென்றி எல்லாம் வென்றுஅகத்துஅடக்கிய
    தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
    தண்கதிர் மதியம் போலவும் தெறுசுடர்
    ஒண்கதிர் ஞாயிறு போலவும்
    மன்னிய பெரும நீ நிலமிசை யானே

    காரிகிழார்

  • தூங்கு கையான் ஓங்கு நடைய

    புறநானூறு

    தூங்கு கையான் ஓங்கு நடைய
    உறழ் மணியான் உயர் மருப்பின
    பிறை நுதலான் செறல் நோக்கின
    பா வடியால் பணை எருத்தின
    தேன் சிதைந்த வரை போல
    மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து
    அயறு சோரூம் இருஞ் சென்னிய
    மைந்து மலிந்த மழ களிறு
    கந்து சேர்பு நிலைஇ வழங்கப்
    பாஅல் நின்று கதிர் சோரும்
    வான உறையும் மதி போலும்
    மாலை வெண் குடை நீழலான்
    வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
    அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
    ஆய் கரும்பின் கொடிக் கூரை
    சாறு கொண்ட களம் போல
    வேறு வேறு பொலிவு தோன்றக்
    குற் றானா உலக் கையால்
    கலிச் சும்மை வியல் ஆங்கண்
    பொலம் தோட்டுப் பைந் தும்பை
    மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
    சின மாந்தர் வெறிக் குரவை
    ஓத நீரில் பெயர்பு பொங்க
    வாய் காவாது பரந்து பட்ட
    வியன் பாசறைக் காப் பாள
    வேந்து தந்த பணி திறையாற்
    சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்
    ஓங்கு கொல்லியோர் அடு பொருந
    வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்
    வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே
    நிற் பாடிய அலங்கு செந்நாப்
    பிற்பிறர் இசை நுவ லாமை
    ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ
    மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
    புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து
    இனிது காண்டிசின் பெரும முனிவிலை
    வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
    சோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே

    குறுங்கோழியூர் கிழார்

  • களிறு கடைஇய தாள்

    புறநானூறு

    களிறு கடைஇய தாள்
    கழல் உரீஇய திருந்துஅடிக்
    கணை பொருது கவிவண் கையால்
    கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து
    மா மறுத்த மலர் மார்பின்
    தோல் பெயரிய எறுழ் முன்பின்
    எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
    ஊர்சுடு விளக்கத்து அழுவிளிக் கம்பலைக்
    கொள்ளை மேவலை ஆகலின் நல்ல
    இல்ல ஆகுபவால் இயல்தேர் வளவ
    தண்புனல் பரந்த பூசல் மண் மறுத்து
    மீனின் செறுக்கும் யாணர்ப்
    பயன்திகழ் வைப்பின் பிறர் அகன்றலை நாடே

    கருங்குழல் ஆதனார்

  • வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்

    புறநானூறு

    வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
    போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
    இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
    ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்து அடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே

    கபிலர்

  • ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்

    புறநானூறு

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்அம்பு கடிவிடுதும் நுன்அரண் சேர்மின் என
    அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
    கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
    எங்கோ வாழிய குடுமி தங் கோச்
    செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பறுளி மணலினும் பலவே

    நெட்டிமையார்

  • சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்

    புறநானூறு

    சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
    கூனும் குறளும் ஊமும் செவிடும்
    மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு
    எண்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
    பேதைமை அல்லது ஊதியம் இல் என
    முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும்
    அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது-
    வட்ட வரிய செம்பொறிச் சேவல்
    ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்
    கானத் தோர் நின் தெவ்வர் நீயே
    புறஞ்சிறை மாக்கட்கு அறங்குறித்து அகத்தோர்
    புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
    பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
    ஆடுகளம் கடுக்கும் அகநாட் டையே
    அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
    ஆற்றும் பெரும நின்செல்வம்
    ஆற்றாமை நின் போற்றா மையே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்