Tag: புறநானூறு

  • நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்

    புறநானூறு

    நகுதத் கனரே நாடு மீக் கூறுநர்
    இளையன் இவன் என உளையக் கூறிப்
    படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
    நெடுநல் யானையும் தேரும் மாவும்
    படைஅமை மறவரும் உடையும் யாம் என்று
    உறுதுப்பு அஞ்சாது உடல்சினம் செருக்கிச்
    சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
    அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு
    ஒருங்கு அகப் படேஎன் ஆயின் பொருந்திய
    என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது
    கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்
    குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக
    ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
    மாங்குடி மருதன் தலைவன் ஆக
    உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
    புலவர் பாடாது வரைக என் நிலவரை
    புரப்போர் புன்கண் கூர
    இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே

    நெடுஞ்செழியன்

  • மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து

    புறநானூறு

    மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
    அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து
    என்னொடு பொருந்தும் என்ப அவரை
    ஆரமர் அலறத் தாக்கித் தேரொடு
    அவர்ப்புறம் காணேன் ஆயின் – சிறந்த
    பேரமர் உண்கண் இவளினும் பிரிக
    அறன்நிலை திரிய அன்பின் அவையத்துத்
    திறன்இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து
    மெலிகோல் செய்தேன் ஆகுக மலி புகழ்
    வையை சூழ்ந்த வலங்கெழு வைப்பின்
    பொய்யா யாணர் மையற் கோமான்
    மாவனும் மன்எயில் ஆந்தையும் உரைசால்
    அந்துவஞ் சாத்தனும் ஆதன் அழிசியும்
    வெஞ்சின இயக்கனும் உளப்படப் பிறரும்
    கண்போல் நண்பிற் கேளிரொடு கலந்த
    இன்களி மகிழ்நகை இழுக்கிய யான் ஒன்றோ
    மன்பதை காக்கும் நீள்குடிச் சிறந்த
    தென்புலம் காவலின் ஒரிஇப் பிறர்
    வன்புலங் காவலின் மாறி யான் பிறக்கே

    பூதப்பாண்டியன்

  • தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண

    புறநானூறு

    தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண
    கயத்து வாழ் யாமை காழ்கோத் தன்ன
    நுண்கோல் தகைத்த தெண்கண் மாக்கிணை
    இனிய காண்க இவண் தணிக எனக் கூறி
    வினவல் ஆனா முதுவாய் இரவல
    தைத் திங்கள் தண்கயம் போலக்
    கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியனகர்
    அடுதீ அல்லது சுடுதீ அறியாது
    இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருநன்
    கிள்ளி வளவன் நல்லிசை யுள்ளி
    நாற்ற நாட்டத்து அறுகாற் பறவை
    சிறுவெள் ளாம்பல் ஞாங்கர்ஊதும்
    கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
    பாதிரி கமழும் ஓதி ஒண்ணுதல்
    இன்னகை விறலியடு மென்மெல இயலிச்
    செல்வை ஆயின் செல்வை ஆகுவை
    விறகுஒய் மாக்கள் பொன்பெற் றன்னதோர்
    தலைப்பாடு அன்று அவன் ஈகை
    நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே

    கோவூர் கிழார்

  • கையது கடன் நிறை யாழே மெய்யது

    புறநானூறு

    கையது கடன் நிறை யாழே மெய்யது
    புரவலர் இன்மையின் பசியே அரையது
    வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
    ஓம்பி உடுத்த உயவற் பாண
    பூட்கை இல்லோன் யாக்கை போலப்
    பெரும்புல் என்ற இரும் பேர் ஒக்கலை
    வையகம் முழுவதுடன் வளைப் பையென
    என்னை வினவுதி ஆயின் மன்னர்
    அடுகளிறு உயவும் கொடிகொள் பாசறைக்
    குருதிப் பரப்பின் கோட்டுமா தொலைச்சிப்
    புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
    பிறங்கு நிலை மாடத்து உறந்தை யோனே
    பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைப்
    பகைப் புலம் படர்தலும் உரியன் தகைத் தார்
    ஒள்ளெரி புரையும் உருகெழு புசும்பூண்
    கிள்ளி வளவற் படர்குவை ஆயின்
    நெடுங் கடை நிற்றலும் இலையே கடும் பகல்
    தேர்வீசு இருக்கை ஆர நோக்கி
    நீ அவற் கண்ட பின்றைப் பூவின்
    ஆடுவண்டு இமிராத் தாமரை
    சூடாய் ஆதல் அதனினும் இலையே

    ஆலந்தூர் கிழார்

  • உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்

    புறநானூறு

    உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின்
    கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது
    சில்செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து
    ஈங்குஎவன் செய்தியோ பாண பூண்சுமந்து
    அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
    மென்மையின் மகளிர்க்கு வணங்கிவன்மையின்
    ஆடவர்ப் பிணிக்கும் பீடுகெழு நெடுந்தகை
    புனிறு தீர் குழவிக்கு இலிற்றுமுலை போலச்
    சுரந்த காவிரி மரங்கொல் மலிநீர்
    மன்பதை புரக்கும் நன்னாட்டுப் பொருநன்
    உட்பகை ஒருதிறம் பட்டெனப் புட்பகைக்கு
    ஏவான் ஆகலின் சாவோம் யாம் என
    நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்பத்
    தணிபறை அறையும் அணிகொள் தேர்வழிக்
    கடுங்கண் பருகுநர் நடுங்குகை உகத்த
    நறுஞ்சேறு ஆடிய வறுந்தலை யானை
    நெடுனகர் வரைப்பின் படுமுழா ஓர்க்கும்
    உறந்தை யோனே குருசில்
    பிறன்கடை மறப்ப நல்குவன் செலினே

    கோவூர் கிழார்

  • அன்னச் சேவல் அன்னச் சேவல்

    புறநானூறு

    அன்னச் சேவல் அன்னச் சேவல்
    ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
    நாடு தலை அளிக்கும் ஒண்முகம் போலக்
    கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
    மையல் மாலை யாம் கையறுபு இனையக்
    குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
    சோழ நன்னாட்டுப் படினே கோழி
    உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
    வாயில் விடாது கோயில் புக்கு எம்
    பெருங் கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
    ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின்
    இன்புறு பேடை அணியத் தன்
    அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே

    பிசிராந்தையார்

  • நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

    புறநானூறு

    நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களி இயல் யானைக் கரிகால் வளவ
    சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப் புகழ் உலகம் எய்திப்
    புறப்புண் நாணி வடக் கிருந்தோனே

    வெண்ணிற் குயத்தியார்

  • மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப

    புறநானூறு

    மண்முழா மறப்பப் பண் யாழ் மறப்ப
    இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச்
    சுரும்பூஆர் தேறல் சுற்றம் மறப்ப
    உழவர் ஓதை மறப்ப விழவும்
    அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப
    உவவுத் தலைவந்த பெருநாள் அமையத்து
    இருசுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர்
    புன்கண் மாலை மலைமறைந் தாங்குத்
    தன்போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
    புறப்புண் நாணி மறத்தகை மன்னன்
    வாள் வடக்கு இருந்தனன் ஈங்கு
    நாள்போல் கழியல ஞாயிற்றுப் பகலே

    கழாஅத் தலையார்

  • அருமிளை இருக்கை யதுவே மனைவியும்

    புறநானூறு

    அருமிளை இருக்கை யதுவே-மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படைமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே
    நல்யாழ்ஆகுளி பதலையடு சுருக்கிச்
    செல்லா மோதில் சில்வளை விறலி
    களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    விசும்புஆடு எருவை புசுந்தடி தடுப்பப்
    பகைப்புலம் மரீஇய தகைப்பெருஞ் சிறப்பின்
    குடுமிக் கோமாற் கண்டு
    நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே

    நெடும்பல்லியத்தனார்

  • மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி

    புறநானூறு

    மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
    மன்ற வேம்பின் ஒண்குழை மிலைந்து
    தெண்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
    வெம்போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
    வம்ப மள்ளரோ பலரே
    எஞ்சுவர் கொல்லோ பகல்தவச் சிறிதே

    இடைக்குன்றூர் கிழார்