Category: புறநானூறு

  • மண் திணிந்த நிலனும்

    புறநானூறு

    மண் திணிந்த நிலனும்
    நிலம் ஏந்திய விசும்பும்
    விசும்பு தைவரு வளியும்
    வளித் தலைஇய தீயும்
    தீ முரணிய நீரும் என்றாங்கு
    ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
    போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
    வலியும் தெறலும் அணியும் உடையோய்
    நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும்நின்
    வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
    யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
    வான வரம்பனை நீயோ பெரும
    அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
    நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
    ஈரைம்பதின் மரும்பொருது களத்து ஒழியப்
    பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
    பாஅல் புளிப்பினும் பகல்இருளினும்
    நாஅல் வேதநெறி திரியினும்
    திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
    நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச்
    சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
    அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
    முத்தீ விளக்கிற் றுஞ்சும்
    பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே

    முரஞ்சியூர் முடிநாகராயர்

  • நளிஇரு முந்நீர் ஏணி யாக

    புறநானூறு

    நளிஇரு முந்நீர் ஏணி யாக
    வளிஇடை வழங்கா வானம் சூடிய
    மண்திணி கிடக்கைத் தண்தமிழ்க் கிழவர்
    முரசு முழங்கு தானை மூவர் உள்ளும்
    அரசுஎனப் படுவது நினதே பெரும
    அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்
    இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    அந்தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத்
    தோடு கொள் வேலின் தோற்றம் போல
    ஆடுகண் கரும்பின் வெண்பூ நுடங்கும்
    நாடுஎனப் படுவது நினதே அத்தை ஆங்க
    நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
    நினவ கூறுவல் எனவ கேண்மதி
    அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
    முறைவெண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு
    உறைவேண்டு பொழுதில் பெயல்பெற் றோறே
    ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்டுமூ
    மாக விசும்பின் நடுவுநின் றாங்குக்
    கண்பொர விளங்கும்நின் விண்பொரு வியன்குடை
    வெயில்மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய
    குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
    வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
    களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை
    வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
    பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை
    ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே
    மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
    இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
    காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்
    அதுநற்கு அறிந்தனை யாயின் நீயும்
    நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
    பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
    குடிபுறம் தருகுவை யாயின் நின்
    அடிபுறம் தருகுவர் அடங்கா தேரே

    வெள்ளைக்குடி நாகனார்

  • உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை

    புறநானூறு

    உவவுமதி உருவின் ஓங்கல் வெண்குடை
    நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
    ஏம முரசம் இழுமென முழங்க
    நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
    தவிரா ஈகைக் கவுரியர் மருக
    செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ
    பொன் னோடைப் புகர் அணிநுதல்
    துன்னருந் திறல் கமழ்கடா அத்து
    எயிரு படையாக எயிற்கதவு இடாஅக்
    கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கில்
    பெருங்கை யானை இரும்பிடர்த் தலையிருந்து
    மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
    கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி
    நிலம் பெயரினும் நின்சொற் பெயரல்
    பொலங் கழற்காற்புலர் சாந்தின்
    விலங் ககன்ற வியன் மார்ப
    ஊர் இல்ல உயவு அரிய
    நீர் இல்ல நீள் இடைய
    பார்வல் இருக்கைக் கவிகண் நோக்கிற்
    செந்தொடை பிழையா வன்கண் ஆடவர்
    அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
    திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந்து உயவும்
    உன்ன மரத்த துன்னருங் கவலை
    நின்நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
    முன்னம் முகத்தின் உணர்ந்து அவர்
    இன்மை தீர்த்தல் வன்மை யானே

    இரும்பிடர்த் தலையார்

  • ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்

    புறநானூறு

    ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
    மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
    குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்
    வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
    நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
    செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
    அறம் பாடின்றே ஆயிழை கணவ
    காலை அந்தியும் மாலை அந்தியும்
    புறவுக் கருவன்ன புன்புல வரகின்
    பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
    குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
    இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
    கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
    அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
    அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
    எங்கோன்வளவன் வாழ்கஎன்று நின்
    பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
    படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
    யானோ தஞ்சம் பெரும இவ் வுலகத்துச்
    சான்றோர் செய்த நன்றுண் டாயின்
    இமையத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
    கொண்டல் மாமழை பொழிந்த
    நுண்பல் துளியினும் வாழிய பலவே

    ஆலத்தூர் கிழார்

  • கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

    புறநானூறு

    கான் உறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
    மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்
    தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
    ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
    குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் புன்னாட்டுள்ளும்
    ஏழெயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின்
    பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை
    பாடுநர் வஞ்சி பாடப் படையோர்
    தாதுஎரு மறுகின் பாசறை பொலியப்
    புலராப் பச்சிலை இடையிடுபு தொடுத்த
    மலரா மாலைப் பந்துகண் டன்ன
    ஊன்சோற் றமலை பான்கடும்பு அருத்தும்
    செம்மற்று அம்மநின் வெம்முனை இருக்கை
    வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற
    அல்லிப் பாவை ஆடுவனப்பு ஏய்ப்பக்
    காம இருவர் அல்லது யாமத்துத்
    தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
    ஒதுக்குஇன் திணிமணல் புதுப்பூம் பள்ளி
    வாயின் மாடந்தொறும் மைவிடை வீழ்ப்ப
    நீஆங்குக் கொண்ட விழவினும் பலவே

    கோவூர்கிழார்

  • கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்

    புறநானூறு

    கடும்பின் அடுகலம் நிறையாக நெடுங் கொடிப்
    பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ
    வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள்
    ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுக என
    மாட மதுரையும் தருகுவன் எல்லாம்
    பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள்
    தொன்னிலக் கிழமை சுட்டின் நன்மதி
    வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
    பசுமண் குரூஉத்திரள் போல அவன்
    கொண்ட குடுமித்தும் இத் தண்பணை நாடே

    கோவூர்கிழார்

  • சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்

    புறநானூறு

    சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்
    அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல
    இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை
    உருகெழு மதியின் நிவந்துசேண் விளங்க
    நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப்
    பாசறை யல்லது நீயல் லாயே
    நிதிமுகம் மழுங்க மண்டி ஒன்னார்
    கடிமதில் பாயும் நின் களிறு அடங் கலவே
    போர் எனில் புகலும் புனைகழல் மறவர்
    காடிடைக் கிடந்த நாடுநனி சேஎய
    செல்வேம் அல்லேம் என்னார் கல்லென்
    விழவுடை ஆங்கண் வேற்றுப்புலத்து இறுத்துக்
    குண கடல் பின்ன தாகக் குட கடல்
    வெண் தலைப் புணரி நின் மான்குளம்பு அலைப்ப
    வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து
    நெஞ்சு நடுங்கு அவலம் பாயத்
    துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே

    கோவூர்கிழார்

  • செஞ்ஞா யிற்றுச் செலவும்

    புறநானூறு

    செஞ்ஞா யிற்றுச் செலவும்
    அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
    பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்
    வளி திரிதரு திசையும்
    வறிது நிலைஇய காயமும் என்றிவை
    சென்றளந்து அறிந்தார் போல என்றும்
    இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
    அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்
    களிறுகவுள் அடுத்த எறிகல் போல
    ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
    யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
    மீப்பாய் களையாது மிசைப் பரந் தோண்டாது
    புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
    இடைப்புலப் பெருவழிச் சொரியும்
    கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • அழல் புரிந்த அடர் தாமரை

    புறநானூறு

    அழல் புரிந்த அடர் தாமரை
    ஐது அடர்ந்ற நூற் பெய்து
    புனை விளைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல்
    பாறு மயிர் இருந்தலை பொலியச் சூடிப்
    பாண் முற்றுக நின் நாள்மகிழ் இருக்கை
    பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர்
    தோள் முற்றுக நின் சாந்துபுலர் அகலம் ஆங்க
    முனிவில் முற்றத்து இனிது முரசு இயம்பக்
    கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்குஅளித்தலும்
    ஒடியா முறையின் மடிவிலை யாகி
    நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
    இல்லை என்போர்க்கு இனன் ஆகி லியர்
    நெல்விளை கழனிப் படுபுள் ஓப்புநர்
    ஒழி மடல் விறகின் கழுமீன் சுட்டு
    வெங்கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
    இளநீர் உதிர்க்கும் வளமிகு நன்னாடு
    பெற்றனர் உவக்கும் நின் படைகொள் மாக்கள்
    பற்றா மாக்களின் பரிவு முந்து உறுத்துக்
    கூவை துற்ற நாற்கால் பந்தர்ச்
    சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
    உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
    ஊழிற்று ஆக நின் செய்கை விழவின்
    கோடியர் நீர்மை போல முறை முறை
    ஆடுநர் கழியும்இவ் உலகத்துக் கூடிய
    நகைப் புறனாக நின் சுற்றம்
    இசைப்புற னாக நீ ஓம்பிய பொருளே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா

    புறநானூறு

    இரும்பிடித் தொழுதியடு பெருங்கயம் படியா
    நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ
    திருந்தரை நோன்வெளில் வருந்த ஒற்றி
    நிலமிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து
    அலமரல் யானை உருமென முழங்கவும்
    பாலில் குழவி அலறவும் மகளிர்
    பூவில் வறுந்தலை முடிப்பவும் நீரில்
    வினைபுனை நல்லில் இனைகூஉக் கேட்பவும்
    இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்
    துன்னரும் துப்பின் வயமான் தோன்றல்
    அறவை யாயின் நினது எனத் திறத்தல்
    மறவை யாயின் போரொடு திறத்தல்
    அறவையும் மறவையும் அல்லை யாகத்
    திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின்
    நீள்மதில் ஒருசிறை ஒடுங்குதல்
    நாணுத்தக வுடைத்திது காணுங் காலே

    கோவூர் கிழார்