Author: Pulan

  • கடுங்கண்ண கொல் களிற்றால்

    புறநானூறு

    கடுங்கண்ண கொல் களிற்றால்
    காப் புடைய எழு முருக்கிப்
    பொன் இயல் புனை தோட்டியான்
    முன்பு துரந்து சமந் தாங்கவும்
    பார்உடைத்த குண்டு அகழி
    நீர் அழுவம் நிவப்புக் குறித்து
    நிமிர் பரிய மா தாங்கவும்
    ஆவம் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
    சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
    பரிசிலர்க்கு அருங்கலம் நல்கவும் குரிசில்
    வலிய ஆகும் நின் தாள்தோய் தடக்கை
    புலவு நாற்றத்த பைந்தடி
    பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன்துவை
    கறிசோறு உண்டு வருந்துதொழில் அல்லது
    பிறிதுதொழில் அறியா ஆகலின் நன்றும்
    மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு
    ஆரணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு
    இருநிலத்து அன்ன நோன்மை
    செருமிகு சேஎய் நின் பாடுநர் கையே

    கபிலர்

  • அரி மயிர்த் திரள் முன்கை

    புறநானூறு

    அரி மயிர்த் திரள் முன்கை
    வால் இழை மட மங்கையர்
    வரி மணற் புனை பாவைக்குக்
    குலவுச் சினைப் பூக் கொய்து
    தண் பொருநைப் புனல் பாயும்
    விண் பொருபுகழ் விறல்வஞ்சிப்
    பாடல் சான்ற விறல்வேந் தனும்மே
    வெப் புடைய அரண் கடந்து
    துப்புறுவர் புறம்பெற் றிசினே
    புறம் பொற்ற வய வேந்தன்
    மறம் பாடிய பாடினி யும்மே
    ஏர் உடைய விழுக் கழஞ்சின்
    சீர் உடைய இழை பெற்றிசினே
    இழை பெற்ற பாடி னிக்குக்
    குரல் புணர்சீர்க் கொளைவல்பாண் மகனுமே
    என ஆங்கு ஒள்அழல் புரிந்த தாமரை
    வெள்ளி நாரால் பூப்பெற் றிசினே

    பேய்மகள் இளவெயினியார்

  • வாள் வலந்தர மறுப் பட்டன

    புறநானூறு

    வாள்வலந்தர மறுப் பட்டன
    செவ் வானத்து வனப்புப் போன்றன
    தாள் களங்கொளக் கழல் பறைந்தன
    கொல் ஏற்றின் மருப்புப் போன்றன
    தோல் துவைத்து அம்பின் துனைதோன்றுவ
    நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன
    மாவே எறிபதத்தான் இடங் காட்டக்
    கறுழ் பொருத செவ் வாயான்
    எருத்து வவ்விய புலி போன்றன
    களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய்
    நுதி மழுங்கிய வெண் கோட்டான்
    உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன
    நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப்
    பொலந் தேர்மிசைப் பொலிவு தோன்றி
    மாக் கடல் நிவந் தெழுதரும்
    செஞ் ஞாயிற்றுக் கவினை மாதோ
    அனையை ஆகன் மாறே
    தாயில் தூவாக் குழவி போல
    ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே

    பரணர்

  • வழிபடு வோரை வல்லறி தீயே

    புறநானூறு

    வழிபடு வோரை வல்லறி தீயே
    பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
    நீமெய் கண்ட தீமை காணின்
    ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
    வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
    தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
    அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
    மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
    மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப
    செய்து இரங்காவினைச் சேண்விளங் கும்புகழ்
    நெய்தருங் கானல் நெடியோய்
    எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே

    ஊன் பொதி பசுங் குடையார்

  • இவன் யார் என்குவை ஆயின் இவனே

    புறநானூறு

    இவன் யார் என்குவை ஆயின் இவனே
    புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
    எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்
    மறலி அன்ன களிற்றுமிசை யோனே
    களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
    பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்
    சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
    மரீஇயோர் அறியாது மைந்துபட் டன்றே
    நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம
    பழன மஞ்ஞை உகுத்த பீலி
    கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்
    கொழுமீன் விளைந்த கள்ளின்
    விழுநீர் வேலி நாடுகிழ வோனே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்

    புறநானூறு

    இமிழ்கடல் வளைஇய ஈண்டுஅகல் கிடக்கைத்
    தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
    மன்உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்
    நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
    இரும்புலி வேட்டுவன் பொறிஅறிந்து மாட்டிய
    பெருங்கல் அடாரும் போன்ம் என விரும்பி
    முயங்கினேன் அல்லனோ யானே மயங்கிக்
    குன்றத்து இறுத்த குரீஇஇனம் போல
    அம்புசென்று இறுத்த அறும்புண் யானைத்
    தூம்புஉடைத் தடக்கை வாயடு துமிந்து
    நாஞ்சில் ஒப்ப நிலமிசைப் புரள
    எறிந்துகளம் படுத்த ஏந்துவாள் வலத்தர்
    எந்தையோடு கிடந்தோர் எம்புன் தலைப்புதல்வர்
    இன்ன விறலும் உளகொல் நமக்கு என
    மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணிக்
    கூற்றுக்கண் ஓடிய வெருவரு பறந்தலை
    எழுவர் நல்வலங் கடந்தோய் நின்
    கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே

    குடபுலவியனார்

  • தூங்கு கையான் ஓங்கு நடைய

    புறநானூறு

    தூங்கு கையான் ஓங்கு நடைய
    உறழ் மணியான் உயர் மருப்பின
    பிறை நுதலான் செறல் நோக்கின
    பா வடியால் பணை எருத்தின
    தேன் சிதைந்த வரை போல
    மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து
    அயறு சோரூம் இருஞ் சென்னிய
    மைந்து மலிந்த மழ களிறு
    கந்து சேர்பு நிலைஇ வழங்கப்
    பாஅல் நின்று கதிர் சோரும்
    வான உறையும் மதி போலும்
    மாலை வெண் குடை நீழலான்
    வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க
    அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
    ஆய் கரும்பின் கொடிக் கூரை
    சாறு கொண்ட களம் போல
    வேறு வேறு பொலிவு தோன்றக்
    குற் றானா உலக் கையால்
    கலிச் சும்மை வியல் ஆங்கண்
    பொலம் தோட்டுப் பைந் தும்பை
    மிசை அலங்கு உளைய பனைப்போழ் செரிஇச்
    சின மாந்தர் வெறிக் குரவை
    ஓத நீரில் பெயர்பு பொங்க
    வாய் காவாது பரந்து பட்ட
    வியன் பாசறைக் காப் பாள
    வேந்து தந்த பணி திறையாற்
    சேர்ந் தவர் கடும்பு ஆர்த்தும்
    ஓங்கு கொல்லியோர் அடு பொருந
    வேழ நோக்கின் விறல்வெம் சேஎய்
    வாழிய பெரும நின் வரம்பில் படைப்பே
    நிற் பாடிய அலங்கு செந்நாப்
    பிற்பிறர் இசை நுவ லாமை
    ஒம்பாது ஈயும் ஆற்றல் எங்கோ
    மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
    புத்தேள் உலகத்து அற்று எனக் கேட்டு வந்து
    இனிது காண்டிசின் பெரும முனிவிலை
    வேறுபுலத்து இறுக்கும் தானையோடு
    சோறுயட நடத்தி நீ துஞ்சாய் மாறே

    குறுங்கோழியூர் கிழார்

  • எருமை அன்ன கருங்கல் இடை தோறு

    புறநானூறு

    எருமை அன்ன கருங்கல் இடை தோறு
    ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
    கானக நாடனைநீயோ பெரும
    நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
    அருளும் அன்பும் நீக்கி நீங்கா
    நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
    குழவி கொள் பவரின் ஓம்புமதி
    அளிதோ தானே அது பெறல்அருங் குரைத்தே

    நரிவெரூஉத் தலையார்

  • பாணர் தாமரை மலையவும் புலவர்

    புறநானூறு

    பாணர் தாமரை மலையவும் புலவர்
    பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
    அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி
    இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு
    இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே

    நெட்டிமையார்

  • யாதும் ஊரே யாவரும் கேளிர்

    புறநானூறு

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னாது என்றலும் இலமே மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ ஆனாது
    கல்பொருது இரங்கும் அல்லல் பேர்யாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

    கணியன் பூங்குன்றன்