ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

புறநானூறு

ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
வாடா யாணர் நாடும் ஊரும்
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
வாடிய பசியர் ஆகிப் பிறர்
நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

குட்டுவன் கீரனார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *