இரு முந்நீர்க் குட்டமும்

புறநானூறு

இரு முந்நீர்க் குட்டமும்
வியன் ஞாலத்து அகலமும்
வளி வழங்கு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றாங்கு
அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை
அறிவும் ஈரமும் பெருங்க ணோட்டமும்
சோறு படுக்கும் தீயோடு
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல்வாழ் வோரே
திருவில் அல்லது கொலைவில் அறியார்
நாஞ்சில் அல்லது படையும் அறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேய அப்
பிறர்மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அருமண் ணினையே
அம்பு துஞ்சும்கடி அரணால்
அறம் துஞ்சும் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்
விதுப்புற அறியா ஏமக் காப்பினை
அனையை ஆகல் மாறே
மன்னுயிர் எல்லாம் நின்அஞ் சும்மே

குறுங்கோழியூர்கிழார்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *