புறநானூறு
இன்று செலினுந் தருமே சிறுவரை
நின்று செலினுந் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே
அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
முள்ளும் நோவ உற்றாக தில்ல
ஈவோர் அரியஇவ் உலகத்து
வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
Leave a Reply Cancel reply