Tag: புறநானூறு

  • தொடி யுடைய தோள் மணந்தணன்

    புறநானூறு

    தொடி யுடைய தோள் மணந்தணன்
    கடி காவிற் பூச் சூடினன்
    தண் கமழுஞ் சாந்து நீவினன்
    செற் றோரை வழி தபுத்தனன்
    நட் டோரை உயர்பு கூறினன்
    வலியரென வழி மொழியலன்
    மெலியரென மீக் கூறலன்
    பிறரைத் தான் இரப் பறியலன்
    இரந் தோர்க்கு மறுப் பறியலன்
    வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
    வருபடை எதிர் தாங்கினன்
    பெயர் படை புறங் கண்டனன்
    கடும் பரிய மாக் கடவினன்
    நெடுந் தெருவில் தேர் வழங்கினன்
    ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்
    தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்
    பாண் உவப்பப் பசி தீர்த்தனன்
    மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச்
    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
    இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே

    பேரெயின் முறுவலார்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்

  • இளையரும் முதியரும் வேறுபுலம் படர

    புறநானூறு

    இளையரும் முதியரும் வேறுபுலம் படர
    எதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்ல
    இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
    வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
    இன்னன் ஆயினன் இளையோன் என்று
    நின்னுரை செல்லும் ஆயின் மற்று
    முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
    புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
    வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
    ஆனாது புகழும் அன்னை
    யாங்குஆ குவள்கொல் அளியள் தானே

    கயமனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்

  • என்திறத்து அவலம் கொள்ளல் இனியே

    புறநானூறு

    என்திறத்து அவலம் கொள்ளல் இனியே
    வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
    நாகாஅல் என வந்த மாறே எழாநெல்
    பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
    வளைஇல் வறுங்கை ஓச்சிக்
    கிளையுள்ஒய்வலோ கூறுநின் உரையே

    குளம்பாதாயனார்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

    புறநானூறு

    கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
    தில்லை அன்ன புல்லென் சடையோடு
    அள்இலைத் தாளி கொய்யு மோனே
    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
    சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

    மாற்பித்தியார்

  • ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்

    புறநானூறு

    ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
    பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
    இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்
    கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
    கான யானை தந்த விறகின்
    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

    மாற்பித்தியார்

  • குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

    புறநானூறு

    குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
    இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
    கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
    கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கி
    அல்லி உணவின் மனைவியடு இனியே
    புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
    வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
    முனித்தலைப் புதல்வர் தந்தை
    தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

    தாயங் கண்ணியார்