Tag: புறநானூறு

  • நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

    புறநானூறு

    நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
    முது முதல்வன் வாய் போகாது
    ஒன்று புரிந்த ஈரி ரண்டின்
    ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
    இகல் கண்டோர் மிகல் சாய்மார்
    மெய் அன்ன பொய் உணர்ந்து
    பொய் ஓராது மெய் கொளீஇ
    மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
    உரைசால் சிறப்பின் உரவோர் மருக
    வினைக்கு வேண்டி நீ பூண்ட
    புலப் புல்வாய்க் கலைப் பச்சை
    சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய
    மறம் கடிந்த அருங் கற்பின்
    அறம் புகழ்ந்த வலை சூடிச்
    சிறு நுதல் பேர் அகல் அல்குல்
    சில சொல்லின் பல கூந்தல் நின்
    நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
    தமக்கு அமைந்த தொழில் கேட்பக்
    காடு என்றா நாடுஎன்று ஆங்கு
    ஈரேழின் இடம் முட்டாது
    நீர் நாண நெய் வழங்கியும்
    எண் நாணப் பல வேட்டும்
    மண் நாணப் புகழ் பரப்பியும்
    அருங் கடிப் பெருங் காலை
    விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை
    என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
    பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
    பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
    தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
    உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
    செல்வல் அத்தை யானே செல்லாது
    மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
    கழைவளர் இமயம்போல
    நிலீஇயர் அத்தை நீ நிலமிசை யானே

    ஆவூர் மூலங் கிழார்

  • மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

    புறநானூறு

    மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
    துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
    இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்
    தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே
    தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
    ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
    கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
    பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
    பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
    நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது என
    வாள்தந் தனனே தலை எனக்கு ஈயத்
    தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
    ஆடுமலி உவகையோடு வருவல்
    ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே

    பெருந்தலைச் சாத்தனார்

  • ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்

    புறநானூறு

    ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
    ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
    பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
    இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
    சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி
    நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
    மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
    நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
    என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
    தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
    பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
    மண்ணமை முழவின் வயிரியர்
    இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்

    புறநானூறு

    நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
    பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
    கடும்பின் கடும்பசி தீர யாழநின்
    நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
    இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
    திருந்துவேல் குமணன் நல்கிய வளனே

    பெருஞ்சித்திரனார்

  • இரவலர் புரவலை நீயும் அல்லை

    புறநானூறு

    இரவலர் புரவலை நீயும் அல்லை
    புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்
    இரவலர் உண்மையும் காண்இனி இரவலர்க்கு
    ஈவோர் உண்மையும் காண் இனி நின்ஊர்க்
    கடுமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
    நெடுநல் யானை எம் பரிசில்
    கடுமான் தோன்றல் செல்வல் யானே

    பெருஞ்சித்திரனார்

  • நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு

    புறநானூறு

    நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
    ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
    பெருமலை யன்ன தோன்றுதல் சூன்முதிர்பு
    உரும்உரறு கருவியடு பெயல்கடன் இறுத்து
    வள்மலை மாறிய என்றூழ்க் காலை
    மன்பதை யெல்லாம் சென்றுணர் கங்கைக்
    கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
    எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
    அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவரச்
    சென்று தலைவருந அல்ல அன்பின்று
    வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
    இற்றை நாளடும் யாண்டுதலைப் பெயர் எனக்
    கண் பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
    அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
    தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
    பனைமருள் தடக்கை யடு முத்துப்படு முற்றிய
    உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
    ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
    படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
    செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்
    இன்மை துரப்ப இசைதர வந்து நின்
    வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி
    வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
    என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
    நின் அளந்து அறிமதி பெரும என்றும்
    வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
    பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
    மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
    நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
    தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப
    வாள் அமர் உயர்ந்தநின் தானையும்
    சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்

  • கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன

    புறநானூறு

    கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
    பாறிய சிதாரேன் பலவுமுதல் பொருந்தித்
    தன்னும் உள்ளேன் பிறிதுபுலம் படர்ந்த என்
    உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி
    மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்
    வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்
    செல்வத் தோன்றல் ஓர் வல்வில் வேட்டுவன்
    தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ
    இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை
    கான்அதர் மயங்கிய இளையர் வல்லே
    தாம்வந்து எய்தா அளவை ஒய்யெனத்
    தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின்
    இரும்பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின்
    அமிழ்தின் மிசைந்து காய்பசி நீங்கி
    நல்மரன் நளிய நறுந்தண் சாரல்
    கல்மிசை அருவி தண்ணெனப் பருகி
    விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே
    பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
    பிறிதொன்று இல்லை காட்டு நாட்டோம் என
    மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
    மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்
    எந்நா டோ என நாடும் சொல்லான்
    யாரீ ரோ எனப் பேரும் சொல்லான்
    பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே
    இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
    அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
    பளிங்கு வகுத் தன்ன தீநீர்
    நளிமலை நாடன் நள்ளிஅவன் எனவே

    வன் பரணர்

  • நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

    புறநானூறு

    நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
    மாலை மருதம் பண்ணிக் காலைக்
    கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
    வரவுஎமர் மறந்தனர் அது நீ
    புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

    வன்பரணர்

  • அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

    புறநானூறு

    அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
    ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
    ஓடி உய்தலும் கூடும்மன்
    ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

    ஓரேருழவர்

  • எந்தை வாழி ஆதனுங்க என்

    புறநானூறு

    எந்தை வாழி ஆதனுங்க என்
    நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே
    நின்யான் மறப்பின் மறக்குங் காலை
    என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
    என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
    விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
    உலக இடைகழி அறைவாய் நிலைஇய
    மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
    பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

    கள்ளில் ஆத்திரையனார்