Tag: புறநானூறு

  • கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

    புறநானூறு

    கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
    அருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
    தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
    வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
    பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
    வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
    படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
    ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
    புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
    வந்தெனன் எந்தை யானே யென்றும்
    மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
    கறையடி யானை இரியல் போக்கும்
    மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்
    களிறும் அன்றே மாவும் அன்றே
    ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே
    பாணர் படுநர்பரிசிலர் ஆங்கவர்
    தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
    பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
    அன்ன வாக நின் ஊழி நின்னைக்
    காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
    உறுமுரண் கடந்த ஆற்றல்
    பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    புறநானூறு

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே

    புறநானூறு

    முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
    ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
    பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே
    நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
    குவளைப் பைஞ்சுனை பருகி அயல
    தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமையம்
    தென்திசை ஆஅய் குடி இன்றாயின்
    பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்

    புறநானூறு

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
    குன்றம் பாடின கொல்லோ
    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு

    புறநானூறு

    விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
    இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ
    நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
    இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
    அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
    குடகடல் ஓட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

    புறநானூறு

    குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
    வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
    வேங்கை முன்றில் குரவை அயரும்
    தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
    ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்
    இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
    வானம் மீன்பல பூப்பின் ஆனாது
    ஒருவழிக் கருவழி யின்றிப்
    பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • மன்றப் பலவின் மாச்சினை மந்தி

    புறநானூறு

    மன்றப் பலவின் மாச்சினை மந்தி
    இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
    பாடின் தெண்கண் கனி செத்து அடிப்பின்
    அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்
    கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
    ஆடு மகள் குறுகின் அல்லது
    பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்

    புறநானூறு

    களங் கனி யன்ன கருங்கோட்டுச் சீறி யாழ்ப்
    பாடு இன் பனுவல் பாணர் உய்த்தெனக்
    களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
    கான மஞ்ஞை கணனுடு சேப்ப
    ஈகை அரிய இழையணி மகளிரொடு
    சாயின்று என்ப ஆஅய் கோயில்
    சுவைக்கு இனி தாகிய குய்யுடை அடிசில்
    பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி
    உரைசால் ஓங்குபுகழ் ஒரிஇய
    முரைசு கெழு செல்வர் நகர்போ லாதே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ

    புறநானூறு

    ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ
    வாடாத் தாமரை சூட்டிய விழுச்சீர்
    ஓடாப் பூட்கை உரவோன் மருக
    வல்ல்ஞ்ம் அல்லேம் ஆயினும் வல்லே
    நின்வயிற் கிளக்குவம் ஆயின் கங்குல்
    துயில்மடிந் தன்ன தூங்கிருள் இறும்பின்
    பறை இசை அருவி முள்ளூர்ப் பொருநர்
    தெறலரு மரபின் நின் கிளையடும் பொலிய
    நிலமிசைப் பரந்த மக்கட்டு எல்லாம்
    புலன் அழுக்கு அற்ற அந்த ணாளன்
    இரந்து சென் மாக்கட்கு இனி இடன் இன்றிப்
    பரந்து இசை நிறகப் பாடினன் அதற்கொண்டு
    சினமிகு தானை வானவன் குடகடல்
    பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப்
    பிறகலம் செல்கலாது அனையேம் அத்தை
    இன்மை துரப்ப அசை தர வந்து நின்
    வண்மையின் தொடுத்தனம் யாமே முள்ளெயிற்று
    அரவுஎறி உருமின் முரசெழுந்து இயம்ப
    அண்ணல் யானையடு வேந்து களத்து ஒழிய
    அருஞ் சமம் ததையத் தாக்கி நன்றும்
    நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
    பெண்ணையம் படப்பை நாடுகிழ வோயே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

    புறநானூறு

    அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
    உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
    வரையா மரபின் மாரி போலக்
    கடாஅ யானைக் கழற்கால் பேகன்
    கொடைமடம் படுதல் அல்லது
    படைமடம் படான் பிறர் படைமயக் குறினே

    பரணர்