Tag: வெண்பா

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

    புறநானூறு

    வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
    எல்லா மனையும் கல்லென் றவ்வே
    வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
    நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே

    வெள்ளை மாளர்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்

    புறநானூறு

    கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
    வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்
    தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
    வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
    இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி
    வாடுமுலை ஊறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

    ஔவையார்

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்

  • நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்

    புறநானூறு

    நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
    நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
    எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ
    அளியள் தானே பூவிலைப் பெண்டே

    நொச்சி நியமங்கிழார்

  • மீன்உண் கொக்கின் தூவி அன்ன

    புறநானூறு

    மீன்உண் கொக்கின் தூவி அன்ன
    வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
    களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
    ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர்
    நோன்கழை துயல்வரும் வெதிரத்து
    வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே

    பூங்கணுத்திரையார்

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்