Tag: வெண்பா

  • நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்

    புறநானூறு

    நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்
    இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
    செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
    மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
    குடப்பால் சில்லுறை போலப்
    படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே

    மாதுரைப் பூதன் இளநாகனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

    புறநானூறு

    கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
    வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
    ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
    திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்
    வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
    ஓம்புமின் ஓம்புமின் இவண் ஓம்பாது
    தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
    கன்றுஅமர் கறவை மான
    முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

    ஒரூஉத்தனார்

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

    புறநானூறு

    நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
    பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
    மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
    தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
    எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
    கையின் வாங்கித் தழீஇ
    மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே

    உலோச்சனார்

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே

  • ஈரச் செவ்வி உதவின ஆயினும்

    புறநானூறு

    ஈரச் செவ்வி உதவின ஆயினும்
    பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி
    வீறுவீறு ஆயும் உழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
    மூதி லாளர் உள்ளும் காதலின்
    தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
    இவற்கு ஈக என்னும் அதுவும்அன் றிசினே
    கேட்டியோ வாழி பாண பாசறைப்
    பூக்கோள் இன்று என்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

    கழாத்தலையார்

  • மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

    புறநானூறு

    மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
    அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
    ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
    அருகுகை மன்ற
    குருதியடு துயல்வரும் மார்பின்
    முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

    கழாத்தலையார்

  • துடி எறியும் புலைய

    புறநானூறு

    துடி எறியும் புலைய
    எறிகோல் கொள்ளும் இழிசின
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை
    இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே
    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    சாத்தந்தையார்

  • வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

    புறநானூறு

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
    கால்வழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் அறுவை போர்ப்பித் திலதே

    ஔவையார்