Tag: புறம்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்

    புறநானூறு

    சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
    ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
    வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
    வள்ளிய னாதல் வையகம் புகழினும்
    உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்
    யானும் இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
    ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
    பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
    வாடா வஞ்சி பாடினேன் ஆக
    அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்
    கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
    வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
    யான்அது பெயர்த்தனென் ஆகத் தான்அது
    சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
    பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
    துன்னரும் பரிசில் தரும் என
    என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

    புறநானூறு

    மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
    கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்று யான்
    பசலை நிலவின் பனிபடு விடியல்
    பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
    ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ
    உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
    நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
    அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது எனச்
    சென்றுயான் நின்றனெ னாக அன்றே
    ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
    வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
    நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம் எனத்
    தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
    ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
    விருந்திறை நல்கி யோனே அந்தரத்து
    அரும்பெறல் அமிழ்த மன்ன
    கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே

    ஔவையார்

  • விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

    புறநானூறு

    விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
    சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
    பாணர் ஆரும் அளவை யான்தன்
    யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
    பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
    தொன்றுபடு துளையடு பருஇழை போகி
    நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
    விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
    இரவி னானே ஈத்தோன் எந்தை
    அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
    இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
    உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
    ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே

    புறத்திணை நன்னாகனார்

  • தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்

    புறநானூறு

    தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
    விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
    முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
    பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
    திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
    அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
    வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
    ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
    தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் வினவலின்
    முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
    அளியன் ஆகலின் பொருநன் இவன் என
    நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
    காண்கு வந்திசிற் பெரும மாண்தக
    இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
    ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
    துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
    நெஞ்சமர் காதல் நின்வெய் யோளடு
    இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
    துளிபதன் அறிந்து பொழிய
    வேலி ஆயிரம் விளைக நின் வயலே

    கல்லாடனார்

  • அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி

    புறநானூறு

    அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
    நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
    பொதியில் ஒருசிறை பள்ளி யாக
    முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
    நாரும் போழும் கிணையோடு சுருக்கி
    ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
    ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
    புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப்
    புரசம் தூங்கும் அறாஅ யாணர்
    வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
    பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
    யாவரும் இன்மையின் கிணைப்பத் தாவது
    பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
    ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
    புலவர் புக்கில் ஆகி நிலவரை
    நிலீ இயர் அத்தை நீயே ஒன்றே
    நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
    நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
    பெரிய ஓதினும் சிறிய உணராப்
    பீடின்று பெருகிய திருவின்
    பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்

    புறநானூறு

    அறவை நெஞ்சத்து ஆயர் வளரும்
    மறவை நெஞ்சத்து தாய்இ லாளர்
    அரும்பலர் செருந்தி நெடுங்கான் மலர்கமழ்
    விழவணி வியன்களம் அன்ன முற்றத்து
    ஆர்வலர் குறுகின் அல்லது காவலர்
    கடவிலும் குறுகாக் கடியுடை வியன்நகர்
    மலைக்கணத்து அன்ன மாடம் சிலம்ப வென்
    அரிக்குரல் தடாரி இரிய ஒற்றிப்
    பாடி நின்ற பன்னாள் அன்றியும்
    சென்ற ஞான்றைச் சென்றுபடர் இரவின்
    வந்ததற் கொண்டு நெடுங்கடை நின்ற
    புன்தலைப் பொருநன் அளியன் தான் எனத்
    தன்உழைக் குறுகல் வேண்டி என்அரை
    முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து
    திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ
    மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்
    அமிழ்தன மரபின் ஊன்துவை அடிசில்
    வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி
    முன்னூர்ப் பொதியில் சேர்ந்த மென்நடை
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு அகற்ற
    அகடுநனை வேங்கை வீகண் டன்ன
    பகடுதரு செந்நெல் போரொடு நல்கிக்
    கொண்டி பெறுக என் றோனே உண்துறை
    மலைஅலர் அணியும் தலைநீர் நாடன்
    கண்டார் கொண்டுமனை திருந்தடி வாழ்த்தி
    _______________________________________
    வான்அறி யலவென் பாடுபசி போக்கல்
    அண்ணல் யானை வேந்தர்
    உண்மையோ அறியலர் காண்பறி யலரே

    ஔவையார்

  • கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்

    புறநானூறு

    கானல் மேய்ந்து வியன்புலத் தல்கும்
    புல்வாய் இரலை நெற்றி யன்ன
    பொலம் இலங்கு சென்னிய பாறுமயிர் அவியத்
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    மன்றப் பலவின் மால்வரைப் பொருந்தி என்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    இருங்கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக்
    கருங்கோற் குறிஞ்சி அடுக்கம் பாடப்
    புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறா அர்
    மான்கண் மகளிர் கான்தேர் அகன்று உவா
    சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங்குறை
    விடர்முகை அடுக்கத்துச் சினைமுதிர் சாந்தம்
    புகர்முக வேழத்து முருப்பொடு மூன்றும்
    இருங்கேழ் வயப்புலி வரி அதள் குவைஇ
    விரிந்து இறை நல்கும் நாடன் எங்கோன்
    கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
    வண்மையும் உடையையோ ஞாயிறு
    கொன்விளங் குதியால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேர் முடமோசியார்

  • நீர் நுங்கின் கண் வலிப்பக்

    புறநானூறு

    நீர் நுங்கின் கண் வலிப்பக்
    கான வேம்பின் காய் திரங்கக்
    கயங் களியும் கோடை ஆயினும்
    ஏலா வெண்பொன் போகுறு காலை
    எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்
    என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
    இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
    செலினே காணா வழியனும் அல்லன்
    புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
    குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
    கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
    செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்
    ஆத னுங்கன் போல நீயும்
    பசித்த ஒக்கல் பழங்கண் வீட
    வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும
    ஐதுஅகல் அல்குல் மகளிர்
    நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே

    கள்ளில் ஆத்திரையனார்