Tag: புறம்

  • பாசறை யீரே பாசறை யீரே

    புறநானூறு

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வேண்டோள்
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
    மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
    அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    அரிசில் கிழார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

    புறநானூறு

    வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
    எல்லா மனையும் கல்லென் றவ்வே
    வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
    நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே

    வெள்ளை மாளர்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்

    புறநானூறு

    கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
    வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்
    தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
    வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
    இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி
    வாடுமுலை ஊறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

    ஔவையார்

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்