Tag: புறம்

  • கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

    புறநானூறு

    கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
    தில்லை அன்ன புல்லென் சடையோடு
    அள்இலைத் தாளி கொய்யு மோனே
    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
    சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

    மாற்பித்தியார்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்

    புறநானூறு

    ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
    பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
    இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்
    கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
    கான யானை தந்த விறகின்
    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

    மாற்பித்தியார்

  • குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

    புறநானூறு

    குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
    இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
    கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
    கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கி
    அல்லி உணவின் மனைவியடு இனியே
    புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
    வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
    முனித்தலைப் புதல்வர் தந்தை
    தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

    தாயங் கண்ணியார்

  • கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

    புறநானூறு

    கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
    அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
    பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
    உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
    அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
    பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
    அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
    உயர்நிலை உலகம் அவன்புக வரி
    நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
    அழுதல் ஆனாக் கண்ணள்
    மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

    தும்பிசேர் கீரனார்

  • அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

    புறநானூறு

    அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
    இளையம் ஆகத் தழையா யினவே இனியே
    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
    இன்னா வைகல் உண்ணும்
    அல்லிப் படுஉம் புல் ஆயினவே

    ஒக்கூர் மாசாத்தனார்

  • பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்

    புறநானூறு

    பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
    இரும்பறை இரவல சேறி ஆயின்
    தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
    வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
    பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
    கல்லா இளையர் நீங்க நீங்கான்
    வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
    கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

  • நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்

    புறநானூறு

    நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்
    பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
    புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்
    ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
    நிரையோடு வரூஉம் என்னைக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே

    மதுரைப் பேராலவாயர்

  • அந்தோ எந்தை அடையாப் பேரில்

    புறநானூறு

    அந்தோ எந்தை அடையாப் பேரில்
    வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
    வெற்றுயாற்று அம்பியின் எற்று அற்று ஆகக்
    கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே
    வையங் காவலர் வளம்கெழு திருநகர்
    மையல் யானை அயாவுயிர்த் தன்ன
    நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
    புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
    பயந்தனை மன்னால் முன்னே இனியே
    பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
    உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
    நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
    விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
    நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய
    வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய
    கழிகலம் மகடூஉப் போல
    புல்என் றனையால் பல்அணி இழந்தே

    ஆவூர் மூலங்கிழார்

  • வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

    புறநானூறு

    வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
    விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
    தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
    உளரும் கூந்தல் நோக்கி களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
    பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக்
    காணலென் கொல் என வினவினை வரூஉம்
    பாண கேண்மதி யாணரது நிலையே
    புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
    எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
    கையுள போலும் கடிதுஅண் மையவே
    முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
    நெடுநிரை தழீஇய மீளி யாளர்
    விடுகணை நீத்தம் துடிபுணை யாக
    வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
    வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
    வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
    கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையடு வந்த உரைய னாகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
    கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
    அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே
    உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
    மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
    இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
    படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

    வடமோதங்கிழார்