Tag: எட்டுத்தொகை

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

    புறநானூறு

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

    ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

  • தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்

    புறநானூறு

    தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில்
    சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர்
    யாங்கா வதுகொல் தானே தாங்காது
    படுமழை உருமின் இறங்கு முரசின்
    கடுமான் வேந்தர் காலை வந்து எம்
    நெடுநிலை வாயில் கொட்குவர் மாதோ
    பொருதாது அமருவர் அல்லர் போர் உழந்து
    அடுமுரண் முன்பின் தன்னையர் ஏந்திய
    வடிவேல் எ·கின் சிவந்த உண்கண்
    தொடியுறழ் முன்கை இளையோள்
    அணிநல் லாகத்து அரும்பிய சுணங்கே

    மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தார் ஆயத்தனார்

  • கீழ் நீரால் மீன் வழங்குந்து

    புறநானூறு

    கீழ் நீரால் மீன் வழங்குந்து
    மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
    கழி சுற்றிய விளை கழனி
    அரிப் பறையாற் புள் ளோப்புந்து
    நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
    மென் பறையாற் புள் இரியுந்து
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீந் தேறல் நறவு மகிழ்ந்து
    தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
    உள்ளி லோர்க்கு வலியா குவன்
    கேளி லோர்க்குக் கேளா குவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
    கிணை யேம் பெரும
    கொழுந் தடிய சூடு என்கோ
    வளநனையின் மட்டு என்கோ
    குறு முயலின் நிணம் பெய்தந்த
    நறுநெய்ய சோறு என்கோ
    திறந்து மறந்து கூட்டு முதல்
    முகந்து கொள்ளும் உணவு என்கோ
    அன்னவை பலபல ______________
    _________________________ வருந்திய
    இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
    அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
    எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
    மாரி வானத்து மீன் நாப்பண்
    விரி கதிர வெண் திங்களின்
    விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசால் நன்கலன் நல்கி
    உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே

    மாங்குடி கிழார்

  • உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த

    புறநானூறு

    உருகெழு ஞாயிற்று ஒண்கதிர் மிசைந்த
    முளிபுல் கானம் குழைப்பக் கல்லென
    அதிர்குரல் ஏறோடு துளிசொரிந் தாங்குப்
    பசிதினத் திரங்கிய கசிவுடை யாக்கை
    அவிழ்புகுவு அறியா தாகலின் வாடிய
    நெறிகொள் வரிக்குடர் குனிப்பத் தண்ணெனக்
    குய்கொள் கொழுந்துவை நெய்யுடை அடிசில்
    சிறுபொன் நன்கலஞ் சுற்ற இரீஇக்
    கோடின் றாக பாடுநர் கடும்பு என
    அரிதுபெறு பொலங்கலம் எளிதினின் வீசி
    நட்டோர் நட்ட நல்லிசைக் குமணன்
    மட்டார் மறுகின் முதிரத் தோனே
    செல்குவை யாயின் நல்குவை பெரிது எனப்
    பல்புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து
    உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று
    இல்லுளைக் குடுமிப் புதல்வன் பன்மாண்
    பாலில் வறுமுலைசுவைத்தனன்பெறாஅன்
    கூழும் சோறும் கடைஇ ஊழின்
    உள்ளில் வருங்கலம் திறந்து அழக் கண்டு
    மறப்புலி உரைத்தும் மதியங் காட்டியும்
    நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப்
    பொடிந்தநின் செவ்வி காட்டு எனப் பலவும்
    வினவல் ஆனா ளாகி நனவின்
    அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச்
    செல்லாச் செல்வம் மிகுந்தனை வல்லே
    விடுதல் வேண்டுவல் அத்தை படுதிரை
    நீர்சூழ் நிலவரை உயர நின்
    சீர்கெழு விழுப்புகழ் ஏத்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்

  • மென் புலத்து வயல் உழவர்

    புறநானூறு

    மென் புலத்து வயல் உழவர்
    வன் புலத்துப் பகடு விட்டுக்
    குறு முயலின் குழைச் சூட்டொடு
    நெடு வாளைப் பல் உவியல்
    பழஞ் சோற்றுப் புக வருந்திப்
    புதல் தளவின் பூச் சூடி
    அரில் பறையாற் புள்ளோப்பி
    அவிழ் நெல்லின் அரியலா ருந்து
    மனைக் கோழிப் பைம்பயி ரின்னே
    கானக் கோழிக் கவர் குரலொடு
    நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
    வே யன்ன மென் தோளால்
    மயில் அன்ன மென் சாயலார்
    கிளிகடி யின்னே
    அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து
    ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
    சீர்சான்ற விழுச் சிறப்பின்
    சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
    செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
    அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
    முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
    கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
    தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
    தீங்குரல் கின் அரிக்குரல் தடாரியடு
    ஆங்கு நின்ற எற் கண்டு
    சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
    ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
    பொன்போல் மடந்தையைக் காட்டிஇவனை
    என்போல் போற்று என் றோனே அதற்கொண்டு
    அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
    அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
    மிக வானுள் எரி தோன்றினும்
    குள மீனோடும் தாள் புகையினும்
    பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
    பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த
    விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என
    உள்ளதும் இல்லதும் அறியாது
    ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன் தாளே

    மதுரை நக்கீரர்