Tag: எட்டுத்தொகை

  • ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

    புறநானூறு

    ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
    கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
    வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
    வரலதோறு அகம் மலர
    ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
    பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
    காண்டற்கு அரியளாகி மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
    கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
    அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
    காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பனர் அன்றி
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
    யாரா குவர்கொல் தாமே நேரிழை
    உருத்த பல்சுணங்கு அணிந்த
    மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

    கபிலர்

  • ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

    புறநானூறு

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
    ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
    தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
    வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
    யார்மகள் என்போய் கூறக் கேள் இனிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    __________________________________
    ______உழக்குக் குருதி ஓட்டிக்
    கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்
    அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • தேஎங் கொண்ட வெண்மண் டையான்

    புறநானூறு

    தேஎங் கொண்ட வெண்மண் டையான்
    வீ_____________ கறக்குந்து
    அவல் வகுத்த பசுங் குடையான்
    புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    குன்றுஏறிப் புனல் பாயின்
    புறவாயால் புனல்வரை யுந்து
    ______________நொடை நறவின்
    மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
    கொடுப்பவும் கொளாஅ னெ____
    ______ர்தந்த நாகிள வேங்கையின்
    கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
    சிறுகோல் உளையும் புரவி
    ________________________யமரே

    பரணர்

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்

    புறநானூறு

    படுமணி மருங்கின் பணைத் தாள் யானையும்
    கொடிநுடங்கு மிசைய தேரும் மாவும்
    படைஅமை மறவரொடு துவன்றிக் கல்லெனக்
    கடல்கண் டன்ன கண்அகன் தானை
    வென்றுஎறி முரசின் வேந்தர் என்றும்
    வண்கை எயினன் வாகை அன்ன
    இவள்நலம் தாராது அமைகுவர் அல்லர்
    என்ஆ வதுகொல் தானே தெண்ணீர்ப்
    பொய்கை மேய்ந்த செவ்வரி நாரை
    தேம்கொள் மருதின் பூஞ்சினை முனையின்
    காமரு காஞ்சித் துஞ்சும்
    ஏமம்சால் சிறப்பின் இப் பணைநல் லூரே

    மதுரைப் படைமங்க மன்னியார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்

    புறநானூறு

    நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
    கடிய கூறும் வேந்தே தந்தையும்
    நெடிய அல்லது பணிந்துமொழி யலனே
    இஃதுஇவர் படிவம் ஆயின் வைஎயிற்று
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    மரம்படு சிறுதீப் போல
    அணங்கா யினள் தான் பிறந்த ஊர்க்கே

    மதுரை மருதனிள நாகனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே

  • வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்

    புறநானூறு

    வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
    கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
    கள்ளரிக்கும் குயம் சிறுசின்
    மீன் சீவும் பாண் சேரி
    வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன
    குவளை உண்கண் இவளைத் தாயே
    ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
    நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
    செந்நுதல் யானை பிணிப்ப
    வருந்தல மன் எம் பெருந்துறை மரனே

    பரணர்