Tag: எட்டுத்தொகை

  • ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

    புறநானூறு

    ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
    ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
    புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

    கழைதின் யானையார்

  • கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்

    புறநானூறு

    கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
    தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
    எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
    இன்னும் தம்மென எம்ம்னோர் இரப்பின்
    முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
    இன்னாது அம்ம இயல்தேர் அண்ணல்
    இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
    உள்ளி வருநர் நசையிழப் போரே
    அனையையும் அல்லை நீயே ஒன்னார்
    ஆர்எயில் அவர்கட்கு ஆகவும் நுமது எனப்
    பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்
    பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

    புறநானூறு

    வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
    கட்சி காணாக் கடமா நல்லேறு
    கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
    கடிய கதழும் நெடுவரைப் படப்பை
    வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
    இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
    கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
    நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி
    நுந்தை தாயம் நிறைவுற எய்திய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
    நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
    புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
    இகழ்ந்ததன் பயனே இயல்தேர் அண்ணல்
    எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்று இவர்
    கைவண் பாரி மகளிர் என்றஎன்
    தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும
    விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
    அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
    இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
    பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே

    கபிலர்

  • இவர் யார் என்குவை ஆயின் இவரே

    புறநானூறு

    இவர் யார் என்குவை ஆயின் இவரே
    ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன்
    முல்லைக்கு ஈத்த செல்லா நல்லிசை
    படுமணி யானைப்பறம்பின் கோமான்
    நெடுமாப் பாரி மகளிர் யானே
    தந்தை தோழன் இவர்என் மகளிர்
    அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே
    நீயே வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
    செம்பு புனைந்து இயற்றிய சேண்நெடும் புரிசை
    உவரா ஈகைத் துவரை ஆண்டு
    நாற்பத்து ஒன்பது வழிமுறை வந்த
    வேளிருள் வேளே விறற்போர் அண்ணல்
    தாரணி யானைச் சேட்டிருங் கோவே
    ஆண்கடன் உடைமையின் பாண்கடன் ஆற்றிய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மா அல்
    யான்தர இவரைக் கொண்மதி வான்கவித்து
    இருங்கடல் உடுத்தஇவ் வையகத்து அருந்திறல்
    பொன்படு மால்வரைக் கிழவ வென்வேல்
    உடலுநர் உட்கும் தானைக்
    கெடல்அருங் குறைய நாடுகிழ வோயே

    கபிலர்

  • பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

    புறநானூறு

    பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
    கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
    செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
    மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
    கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
    நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
    களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
    விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
    இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
    நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
    கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
    பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
    யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
    வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
    நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
    அடங்கா மன்னரை அடக்கும்
    மடங்கா விளையுள் நாடு கிழவோயே

    கபிலர்

  • கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

    புறநானூறு

    கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
    செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்
    அனையர் வாழியோ இரவலர் அவரைப்
    புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
    உடைமை ஆகும் அவர் உடைமை
    அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

    பெரும்பதுமனார்

  • செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

    புறநானூறு

    செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
    ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
    நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
    அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
    செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
    மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
    கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
    தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே

    கோப்பெருஞ் சோழன்

  • அருவி தாழ்ந்த பெருவரை போல

    புறநானூறு

    அருவி தாழ்ந்த பெருவரை போல
    ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
    கடவுள் சான்ற கற்பின் சேயிழை
    மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
    கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித்
    திண்தேர் அண்ணல் நிற்பா ராட்டிக்
    காதல் பெறாமையின் கனவினும் அரற்றும்என்
    காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
    ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
    வேல்கெழு குருசில் கண்டேன் ஆதலின்
    விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த
    தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
    பணிந்துக்கூட் டுண்ணும் மணிப்பருங் கடுந்திறல்
    நின்னோ ரன்னநின் புதல்வர் என்றும்
    ஒன்னார் வாட அருங்கலம் தந்து நும்
    பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
    முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்
    யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
    பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
    நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
    இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
    புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
    நீடு வாழிய நெடுந்தகை யானும்
    கேளில் சேஎய் நாட்டின் எந் நாளும்
    துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கி நின்
    அடிநிழல் பழகிய வடியுறை
    கடுமான் மாற மறவா தீமே

    வடமவண்ணக்கண் பேரிசாத்தனார்

  • மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

    புறநானூறு

    மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
    வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
    பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
    நின்தலை வந்த இருவரை நினைப்பின்
    தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
    அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்
    நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
    அனையை அல்லை அடுமான் தோன்றல்
    பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
    உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
    ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே
    அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
    இன்னும் கேண்மதி இசைவெய் யோயே
    நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
    எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
    நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே
    அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின்
    இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
    அதனால்ஒழிகதில் அத்தைநின் மறனேவல்விரைந்து
    எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
    ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
    செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
    அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
    விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

    புல்லாற்றூர் எயிற்றியனார்

  • வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

    புறநானூறு

    வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
    கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
    கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
    மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
    உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
    செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
    மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
    வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
    எம்மால் வியக்கப் படூஉ மோரே
    இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
    குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
    புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
    சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
    பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே
    மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
    உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்
    நல்லறி வுடையோர் நல்குரவு
    உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்