Author: Pulan

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

    புறநானூறு

    மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
    வகைமாண் நல்லில்
    பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
    இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
    புலியினம் மடிந்த கல்லளை போலத்
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
    இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
    உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
    என்வரவு அறீஇச்
    சிறி திற்குப் பெரிது உவந்து
    விரும்பிய முகத்த னாகி என் அரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
    அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
    நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
    யான்உண அருளல் அன்றியும் தான்உண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருனை
    கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
    உரைசெல அருளி யோனே
    பறைஇசை அருவிப் பாயல் கோவே

    திருத்தாமனார்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

  • கீழ் நீரால் மீன் வழங்குந்து

    புறநானூறு

    கீழ் நீரால் மீன் வழங்குந்து
    மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
    கழி சுற்றிய விளை கழனி
    அரிப் பறையாற் புள் ளோப்புந்து
    நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
    மென் பறையாற் புள் இரியுந்து
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீந் தேறல் நறவு மகிழ்ந்து
    தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
    உள்ளி லோர்க்கு வலியா குவன்
    கேளி லோர்க்குக் கேளா குவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
    கிணை யேம் பெரும
    கொழுந் தடிய சூடு என்கோ
    வளநனையின் மட்டு என்கோ
    குறு முயலின் நிணம் பெய்தந்த
    நறுநெய்ய சோறு என்கோ
    திறந்து மறந்து கூட்டு முதல்
    முகந்து கொள்ளும் உணவு என்கோ
    அன்னவை பலபல ______________
    _________________________ வருந்திய
    இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
    அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
    எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
    மாரி வானத்து மீன் நாப்பண்
    விரி கதிர வெண் திங்களின்
    விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசால் நன்கலன் நல்கி
    உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே

    மாங்குடி கிழார்

  • மென் புலத்து வயல் உழவர்

    புறநானூறு

    மென் புலத்து வயல் உழவர்
    வன் புலத்துப் பகடு விட்டுக்
    குறு முயலின் குழைச் சூட்டொடு
    நெடு வாளைப் பல் உவியல்
    பழஞ் சோற்றுப் புக வருந்திப்
    புதல் தளவின் பூச் சூடி
    அரில் பறையாற் புள்ளோப்பி
    அவிழ் நெல்லின் அரியலா ருந்து
    மனைக் கோழிப் பைம்பயி ரின்னே
    கானக் கோழிக் கவர் குரலொடு
    நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
    வே யன்ன மென் தோளால்
    மயில் அன்ன மென் சாயலார்
    கிளிகடி யின்னே
    அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து
    ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
    சீர்சான்ற விழுச் சிறப்பின்
    சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
    செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
    அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
    முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
    கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
    தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
    தீங்குரல் கின் அரிக்குரல் தடாரியடு
    ஆங்கு நின்ற எற் கண்டு
    சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
    ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
    பொன்போல் மடந்தையைக் காட்டிஇவனை
    என்போல் போற்று என் றோனே அதற்கொண்டு
    அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
    அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
    மிக வானுள் எரி தோன்றினும்
    குள மீனோடும் தாள் புகையினும்
    பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
    பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த
    விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என
    உள்ளதும் இல்லதும் அறியாது
    ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன் தாளே

    மதுரை நக்கீரர்

  • பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்

    புறநானூறு

    பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
    குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற்
    குடிமுறை பாடி ஒய்யென வருந்தி
    அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
    கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
    வள்ளன் மையின்எம் வரைவோர் யார் என
    உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
    உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
    மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
    ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    கூர்ந்தஎவ் வம்வீடக் கொழுநிணம் கிழிப்பக்
    கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
    மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன
    வெண்நிண மூரி அருள நாளுற
    ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
    தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
    போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
    அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
    கேடின்று நல்குமதி பெரும மாசில்
    மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
    கோடை யாயினும் கோடி _____________
    காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந
    வாய்வாள் வளவன் வாழ்க எனப்
    பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே

    நல்லிறையனார்