Author: Pulan

  • திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

    புறநானூறு

    திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
    அரசர் உழைய ராகவும் புரைதபு
    வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
    யானும்பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
    உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
    ஈயென இரத்தலோ அரிதே நீ அது
    நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
    எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
    தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
    தண்பல இழிதரும் அருவி நின்
    கொண்டுபெருங்கானம் பாடல் எனக்கு எளிதே

    மோசிகீரனார்

  • மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    புறநானூறு

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
    சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
    அடுபோர் ஆனா ஆதன் ஓரி
    மாரி வண்கொடை காணிய நன்றும்
    சென்றது மன் எம் கண்ணுளங் கடும்பே
    பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
    வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
    யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
    பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
    கூடுகொள் இன்னியம் கறங்க
    ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

    வண்பரணர்

  • வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    புறநானூறு

    வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
    பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
    புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
    கேழற் பன்றி வீழ அயலது
    ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
    புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
    கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்று இவன்
    விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
    ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
    சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
    ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ
    பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
    மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
    கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்
    எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
    பதலை ஒருகண் பையென இயக்குமின்
    மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று
    இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
    கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
    தன்பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
    நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
    வேட்டுவர் இல்லை நின் ஒப் போர் என
    வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
    தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
    ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்
    தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
    பன்மணிக் கு வையொடும் விரைஇக் கொண்ம் எனச்
    சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச் சிமை
    ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே

    வண்பரணர்

  • பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

    புறநானூறு

    பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
    விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
    முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
    நன்னன் மருகன் அன்றியும் நீயும்
    முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்
    பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
    அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
    மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்

  • கீழ் நீரால் மீன் வழங்குந்து

    புறநானூறு

    கீழ் நீரால் மீன் வழங்குந்து
    மீநீரான் கண்ணன்ன மலர்பூக் குந்து
    கழி சுற்றிய விளை கழனி
    அரிப் பறையாற் புள் ளோப்புந்து
    நெடுநீர் தொகூஉம் மணல் தண்கான்
    மென் பறையாற் புள் இரியுந்து
    நனைக் கள்ளின் மனைக் கோசர்
    தீந் தேறல் நறவு மகிழ்ந்து
    தீங் குரவைக் கொளைத்தாங் குந்து
    உள்ளி லோர்க்கு வலியா குவன்
    கேளி லோர்க்குக் கேளா குவன்
    கழுமிய வென்வேல் வேளே
    வளநீர் வாட்டாற்று எழினி யாதன்
    கிணை யேம் பெரும
    கொழுந் தடிய சூடு என்கோ
    வளநனையின் மட்டு என்கோ
    குறு முயலின் நிணம் பெய்தந்த
    நறுநெய்ய சோறு என்கோ
    திறந்து மறந்து கூட்டு முதல்
    முகந்து கொள்ளும் உணவு என்கோ
    அன்னவை பலபல ______________
    _________________________ வருந்திய
    இரும்பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய
    அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை
    எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே
    மாரி வானத்து மீன் நாப்பண்
    விரி கதிர வெண் திங்களின்
    விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல்லிசை
    யாமும் பிறரும் வாழ்த்த நாளும்
    நிரைசால் நன்கலன் நல்கி
    உரைசெலச் சுரக்க அவன் பாடல்சால் வளனே

    மாங்குடி கிழார்

  • மென் புலத்து வயல் உழவர்

    புறநானூறு

    மென் புலத்து வயல் உழவர்
    வன் புலத்துப் பகடு விட்டுக்
    குறு முயலின் குழைச் சூட்டொடு
    நெடு வாளைப் பல் உவியல்
    பழஞ் சோற்றுப் புக வருந்திப்
    புதல் தளவின் பூச் சூடி
    அரில் பறையாற் புள்ளோப்பி
    அவிழ் நெல்லின் அரியலா ருந்து
    மனைக் கோழிப் பைம்பயி ரின்னே
    கானக் கோழிக் கவர் குரலொடு
    நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து
    வே யன்ன மென் தோளால்
    மயில் அன்ன மென் சாயலார்
    கிளிகடி யின்னே
    அகல் அள்ளற் புள்இரீஇ யுந்து
    ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
    சீர்சான்ற விழுச் சிறப்பின்
    சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
    செல்லா நல்லிசை உறந்தைக் குணாது
    நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்
    அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும
    முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்
    கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்
    தன்கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின்
    தீங்குரல் கின் அரிக்குரல் தடாரியடு
    ஆங்கு நின்ற எற் கண்டு
    சிறிதும் நில்லான் பெரிதுங் கூறான்
    அருங்கலம் வரவே அருளினன் வேண்டி
    ஐயென உரைத்தன்றி நல்கித் தன்மனைப்
    பொன்போல் மடந்தையைக் காட்டிஇவனை
    என்போல் போற்று என் றோனே அதற்கொண்டு
    அவன்மறவ லேனே பிறர்உள்ள லேனே
    அகன் ஞாலம் பெரிது வெம்பினும்
    மிக வானுள் எரி தோன்றினும்
    குள மீனோடும் தாள் புகையினும்
    பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
    பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த
    விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க என
    உள்ளதும் இல்லதும் அறியாது
    ஆங்குஅமைந் தன்றால் வாழ்க அவன் தாளே

    மதுரை நக்கீரர்