புறநானூறு
பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
நினக்கும் வருதல் வைகல் அற்றே
வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
நசை வேண்டாது நன்று மொழிந்தும்
நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
பொலம் படைய மா மயங்கிட
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
கொள் என விடுவை யாயின் வெள்ளென
ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே
கரவட்டனார்