Author: Pulan

  • இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்

    புறநானூறு

    இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்
    உடைஇலை நடுவணது இடைபிறர்க்கு இன்றித்
    தாமே ஆண்ட ஏமம் காவலர்
    இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக்
    காடுபதி யாகப் போகித் தத்தம்
    நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் நீயும் கேண்மதி அத்தை வீயாது
    உடம்பொடு நின்ற உயிரும் இல்லை
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே
    கள்ளி ஏய்ந்த முள்ளியம் புறங்காட்டு
    வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்
    உப்பிலாஅ அவிப் புழுக்கல்
    கைக் கொண்டு பிறக்கு நோக்காது
    இழி பிறப்பினோன் ஈயப் பெற்று
    நிலங்கல னாக இலங்குபலி மிசையும்
    இன்னா வைகல் வாரா முன்னே
    செய்ந்நீ முன்னிய வினையே
    முந்நீர் வரைப்பகம் முழுதுடன் துறந்தே

    ஐயாதிச் சிறுவெண்டேரையார்

  • ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த

    புறநானூறு

    ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
    மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
    பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
    பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
    செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
    அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
    கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்
    ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
    நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
    அறம்குறித் தன்று பொருளா குதலின்
    மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
    கைபெய்த நீர் கடற் பரப்ப
    ஆம் இருந்த அடை நல்கிச்
    சோறு கொடுத்து மிகப் பெரிதும்
    வீறுசான் நன்கலம் வீசி நன்றும்
    சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
    வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
    பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
    காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
    இல்என்று இல்வயின் பெயர மெல்ல
    இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
    உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே

    சிறுவெண்டேரையார்

  • விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்

    புறநானூறு

    விழுக்கடிப்பு அறைந்த முழுக்குரல் முரசம்
    ஒழுக்குடை மருங்கின் ஒருமொழித் தாக
    அரவுஎறி உருமின் உரறுபு சிலைப்ப
    ஒருதா மாகிய பெருமை யோரும்
    தம்புகழ் நிறீஇச் சென்றுமாய்ந் தனரே
    அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால்
    _______________________ உரைப்பக் கேண்மதி
    நின் ஊற்றம் பிறர் அறியாது
    பிறர் கூறிய மொழி தெரியா
    ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி
    இரவின் எல்லை வருவது நாடி
    உரை ________________________________
    உழவொழி பெரும்பகடு அழிதின் றாங்குச்
    செங்கண் மகளிரொடு சிறுதுளி அளைஇ
    அங்கள் தேறல் ஆங்கலத்து உகுப்ப
    கெடல் அருந் திருவ_______________
    மடை வேண்டுநர்க்கு இடை அருகாது
    அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி
    விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப
    நீர்நீலை பெருத்த வார்மணல் அடைகரைக்
    காவு தோறும் ___________________
    மடங்கல் உண்மை மாயமோ அன்றே

    கோதமனார்

  • பெரிது ஆராச் சிறு சினத்தர்

    புறநானூறு

    பெரிது ஆராச் சிறு சினத்தர்
    சில சொல்லால் பல கேள்வியர்
    நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
    கலுழ் நனையால் தண் தேறலர்
    கனி குய்யாற் கொழுந் துவையர்
    தாழ் உவந்து தழூஉ மொழியர்
    பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
    ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
    சிலரே பெரும கேள் இனி நாளும்
    பலரே தகை அஃது அறியா தோரே
    அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
    இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
    நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
    நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப்
    பாறுஇறை கொண்ட பறந்தலை மாகத
    கள்ளி போகிய களரி மருங்கின்
    வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளடு
    புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
    புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
    அழல்வாய்ப் புக்க பின்னும்
    பலர்வாய்த்து இராஅர் பகுத்துஉண் டோரே

    சங்க வருணர் என்னும் நாகரியர்

  • பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்

    புறநானூறு

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
    பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
    விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
    களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
    நினக்கும் வருதல் வைகல் அற்றே
    வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
    அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்
    நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
    பொலம் படைய மா மயங்கிட
    இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
    கொள் என விடுவை யாயின் வெள்ளென
    ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே

    கரவட்டனார்

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்