Author: Pulan

  • மீன் நொடுத்து நெல் குவைஇ

    புறநானூறு

    மீன் நொடுத்து நெல் குவைஇ
    மிசை யம்பியின் மனைமறுக் குந்து
    மனைக் கவைஇய கறிமூ டையால்
    கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
    கலந் தந்த பொற் பரிசம்
    கழித் தொணியான் கரைசேர்க் குந்து
    மலைத் தாரமும் கடல் தாரமும்
    தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
    புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
    முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன
    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்
    புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
    தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
    வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
    வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து
    இடைமதில் சேக்கும் புரிசைப்
    படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே

    பரணர்

  • கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்

    புறநானூறு

    கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
    மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
    ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று
    என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
    திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
    பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
    பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
    மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
    ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
    கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்
    தன்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
    பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
    கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
    வாள்தக வைகலும் உழக்கும்
    மாட்சி யவர் இவள் தன்னை மாரே

    அரிசில் கிழார்

  • வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு

    புறநானூறு

    வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
    அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
    செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
    எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
    அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
    ________________________________________________
    புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
    மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
    பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
    விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
    சுணங்கணி வனமுலை அவளடு நாளை
    மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
    ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
    நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
    வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
    படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவின் இழப்பது கொல்லோ
    மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே

    பரணர்

  • அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

    புறநானூறு

    அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
    குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
    மாமகள் __________________
    ________லென வினவுதி கேள் நீ
    எடுப்பவெ ________________
    ___________________ மைந்தர் தந்தை
    இரும்பனை அன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

  • வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

    புறநானூறு

    வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
    மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
    தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
    கடல் ஆடிக் கயம் பாய்ந்து
    கழி நெய்தற் பூக் குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
    _______________________________ லத்தி
    வளர வேண்டும் அவளே என்றும்
    ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்

  • ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

    புறநானூறு

    ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
    கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
    வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
    வரலதோறு அகம் மலர
    ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
    பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
    காண்டற்கு அரியளாகி மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
    கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
    அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
    காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பனர் அன்றி
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
    யாரா குவர்கொல் தாமே நேரிழை
    உருத்த பல்சுணங்கு அணிந்த
    மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

    கபிலர்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்