Author: Pulan

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • துடி எறியும் புலைய

    புறநானூறு

    துடி எறியும் புலைய
    எறிகோல் கொள்ளும் இழிசின
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை
    இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே
    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    சாத்தந்தையார்

  • பாசறை யீரே பாசறை யீரே

    புறநானூறு

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வேண்டோள்
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
    மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
    அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    அரிசில் கிழார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்