Author: Pulan

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்

  • சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

    புறநானூறு

    சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
    தூவெள் அறுவை மாயோற் குறுகி
    இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
    கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
    மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

    நெடுங்கழுத்துப் பரணர்

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்