Author: Pulan

  • வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

    புறநானூறு

    வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
    விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
    தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
    உளரும் கூந்தல் நோக்கி களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
    பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக்
    காணலென் கொல் என வினவினை வரூஉம்
    பாண கேண்மதி யாணரது நிலையே
    புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
    எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
    கையுள போலும் கடிதுஅண் மையவே
    முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
    நெடுநிரை தழீஇய மீளி யாளர்
    விடுகணை நீத்தம் துடிபுணை யாக
    வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
    வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
    வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
    கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையடு வந்த உரைய னாகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
    கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
    அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே
    உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
    மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
    இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
    படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

    வடமோதங்கிழார்

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே

  • ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

    புறநானூறு

    ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே
    அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்
    என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
    இன்னாது உற்ற அறனில் கூற்றே
    திரைவளை முன்கை பற்றி
    வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

    வன்பரணர்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்

    புறநானூறு

    நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
    நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
    எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ
    அளியள் தானே பூவிலைப் பெண்டே

    நொச்சி நியமங்கிழார்

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்

  • சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்

    புறநானூறு

    சிறாஅஅர் துடியர் பாடுவல் மகாஅஅர்
    தூவெள் அறுவை மாயோற் குறுகி
    இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
    விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்
    என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே
    கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
    மணிமருள் மாலை சூட்டி அவன் தலை
    ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே

    நெடுங்கழுத்துப் பரணர்