Author: Pulan

  • ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

    புறநானூறு

    ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
    வாடா யாணர் நாடும் ஊரும்
    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
    கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
    காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
    மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
    பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
    ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசியர் ஆகிப் பிறர்
    நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

    குட்டுவன் கீரனார்

  • தொடி யுடைய தோள் மணந்தணன்

    புறநானூறு

    தொடி யுடைய தோள் மணந்தணன்
    கடி காவிற் பூச் சூடினன்
    தண் கமழுஞ் சாந்து நீவினன்
    செற் றோரை வழி தபுத்தனன்
    நட் டோரை உயர்பு கூறினன்
    வலியரென வழி மொழியலன்
    மெலியரென மீக் கூறலன்
    பிறரைத் தான் இரப் பறியலன்
    இரந் தோர்க்கு மறுப் பறியலன்
    வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
    வருபடை எதிர் தாங்கினன்
    பெயர் படை புறங் கண்டனன்
    கடும் பரிய மாக் கடவினன்
    நெடுந் தெருவில் தேர் வழங்கினன்
    ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்
    தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்
    பாண் உவப்பப் பசி தீர்த்தனன்
    மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச்
    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
    இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே

    பேரெயின் முறுவலார்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே