Author: Pulan

  • மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

    புறநானூறு

    மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
    வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
    பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
    நின்தலை வந்த இருவரை நினைப்பின்
    தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
    அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்
    நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
    அனையை அல்லை அடுமான் தோன்றல்
    பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
    உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
    ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே
    அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
    இன்னும் கேண்மதி இசைவெய் யோயே
    நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
    எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
    நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே
    அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின்
    இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
    அதனால்ஒழிகதில் அத்தைநின் மறனேவல்விரைந்து
    எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
    ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
    செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
    அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
    விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

    புல்லாற்றூர் எயிற்றியனார்

  • முற்றிய திருவின் மூவர் ஆயினும்

    புறநானூறு

    முற்றிய திருவின் மூவர் ஆயினும்
    பெட்பின்றி ஈதல் யாம்வேண் டலமே
    விறற்சினம் தணிந்த விரைபரிப் புரவி
    உறுவர் செல்சார்வு ஆகிச் செறுவர்
    தாளுளம் தபுத்த வாள்மிகு தானை
    வெள்வீ வேலிக் கோடைப் பொருந
    சிறியவும் பெரியவும் புழைகெட விலங்கிய
    மான்கணம் தொலைச்சிய கடுவிசைக் கதநாய்
    நோன்சிலை வேட்டுவ நோயிலை யாகுக
    ஆர்கலி யாணர்த் தரீஇய கால் வீழ்த்துக்
    கடல்வயிற் குழீஇய அண்ணலங் கொண்மூ
    நீரின்று பெயரா ஆங்குத் தேரொடு
    ஒளிறுமறுப்பு ஏந்திய செம்மற்
    களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே

    பெருந்தலைச் சாத்தனார்

  • குன்றும் மலையும் பலபின் ஒழிய

    புறநானூறு

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

    பெருஞ்சித்திரனார்

  • எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

    புறநானூறு

    எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ
    பருகு அன்ன வேட்கை இல்அழி
    அருகிற் கண்டும் அறியார் போல
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்
    தாள்இலாளர் வேளார் அல்லர்
    வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பின் ஆளி போல
    உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
    நோவா தோன்வயின் திரங்கி
    வாயா வன்கனிக்கு உலமரு வோரே

    பெருஞ்சித்திரனார்

  • வாயி லோயே வாயி லோயே

    புறநானூறு

    வாயி லோயே வாயி லோயே
    வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித் தாம்
    உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
    வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
    பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
    கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
    தன்அறி யலன்கோல் என்னறி யலன்கொல்
    அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென
    வறுந்தலை உலகமும் அன்றே அதனால்
    காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
    மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
    மழுவுடைக் காட்டகத்து அற்றே
    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே

    ஔவையார்

  • ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்

    புறநானூறு

    ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
    ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
    கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
    கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று
    தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
    உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே
    ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
    சேறோடு பட்ட சிறுமைத்து ஆயினும்
    உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
    புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
    உள்ளிச் சென்றோர் பழியலர் அதனாற்
    புலவேன் வாழியர் ஓரி விசும்பின்
    கருவி வானம் போல
    வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே

    கழைதின் யானையார்

  • செய்குவம் கொல்லோ நல்வினை எனவே

    புறநானூறு

    செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
    ஐயம் அறாஅர் கசடுஈண்டு காட்சி
    நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே
    யானை வேட்டுவன் யானையும் பெறுமே
    குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
    அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
    செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்
    செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
    செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
    மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்
    மாறிப் பிறவார் ஆயினும் இமையத்துக்
    கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
    தீதில் யாக்கையடு மாய்தல் தவத் தலையே

    கோப்பெருஞ் சோழன்

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

    புறநானூறு

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
    நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
    வெயிலென முனியேன் பனியென மடியேன்
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

    ஆவூர் மூலங்கிழார்

  • பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

    புறநானூறு

    பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
    கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
    செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
    மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
    கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
    நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
    களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
    விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
    இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
    நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
    கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
    பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
    யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
    வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
    நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
    அடங்கா மன்னரை அடக்கும்
    மடங்கா விளையுள் நாடு கிழவோயே

    கபிலர்

  • கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்

    புறநானூறு

    கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
    நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
    செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்
    அனையர் வாழியோ இரவலர் அவரைப்
    புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
    உடைமை ஆகும் அவர் உடைமை
    அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே

    பெரும்பதுமனார்