Author: Pulan

  • அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்

    புறநானூறு

    அணங்குடை அவுணர் கணம்கொண்டு ஒளித்தெனச்
    சேண்விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது
    இருள்கண் கெடுத்த பருதி ஞாலத்து
    இடும்பைகொள் பருவரல் தீரக் கடுந்திறல்
    அஞ்சன் உருவன் தந்து நிறுத்தாங்கு
    அர சிழந்து இருந்த அல்லற் காலை
    முரசுஎழுந்து இரங்கும் முற்றமொடு கரைபொருது
    இரங்குபுனல் நெரிதரு மிகுபெருங் காவிரி
    மல்லல் நன்னாட்டு அல்லல் தீரப்
    பொய்யா நாவிற் கபிலன் பாடிய
    மையணி நெடுவரை ஆங்கண் ஒய்யெனச்
    செருப்புகல் மறவர் செல்புறம் கண்ட
    எள்ளறு சிறப்பின் முள்ளூர் மீமிசை
    அருவழி இருந்த பெருவிறல் வளவன்
    மதிமருள் வெண்குடை காட்டி அக்குடை
    புதுமையின் நிறுத்த புகழ்மேம் படுந
    விடர்ப்புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண்
    சுரும்பார் கண்ணிப் பெரும்பெயர் நும்முன்
    ஈண்டுச்செய் நல்வினை யாண்டுச்சென்று உணீஇயர்
    உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்
    ஆறுகொள் மருங்கின் மாதிரம் துழவும்
    கவலை நெஞ்சத்து அவலந் தீர
    நீதோன் றினையே நிரைத்தார் அண்ணல்
    கல்கண் பொடியக் கானம் வெம்ப
    மல்குநீர் வரைப்பில் கயம்பல உணங்கக்
    கோடை நீடிய பைதறு காலை
    இருநிலம் நெளிய ஈண்டி
    உரும்உரறு கருவிய மழைபொழிந் தாங்கே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • எந்தை வாழி ஆதனுங்க என்

    புறநானூறு

    எந்தை வாழி ஆதனுங்க என்
    நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே
    நின்யான் மறப்பின் மறக்குங் காலை
    என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
    என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
    விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
    உலக இடைகழி அறைவாய் நிலைஇய
    மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
    பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

    கள்ளில் ஆத்திரையனார்

  • ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்

    புறநானூறு

    ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
    கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
    யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
    தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
    இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
    பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
    இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
    உடையை வாழி யெற் புணர்ந்த பாலே
    பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
    காணாது கழிந்த வைகல் காணா
    வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
    கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

    புறநானூறு

    ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
    வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
    பாடிப் பெற்ற பொன்னணி யானை
    தமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்
    திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
    கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
    குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்
    புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
    தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
    மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
    கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
    பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
    எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
    பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
    வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
    இரும்பனங் குடையின் மிசையும்
    பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே

    ஆவூர் மூலங்கிழார்

  • கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து

    புறநானூறு

    கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து
    கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
    மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
    உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
    உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
    ஈண்டோர் இன்சா யலனே வேண்டார்
    எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
    கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
    நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
    அஞ்சி நீங்கும் காலை
    ஏம மாகத் தான்முந் துறுமே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென

    புறநானூறு

    ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென
    ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
    மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
    விசிபிணி முரசமொடு மண்பல தந்த
    திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
    படை வேண்டுவழி வாள் உதவியும்
    வினை வேண்டுவழி அறிவு உதவியும்
    வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
    அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
    தோலா நல்லிசை நாலை கிழவன்
    பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
    திருந்துவேல் நாகற் கூறினர் பலரே

    வடநெடுந்தத்தனார்

  • நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

    புறநானூறு

    நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
    இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே
    இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
    இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
    மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
    வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
    ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
    இன்மை தீர வேண்டின் எம்மொடு
    நீயும் வம்மோ முதுவாய் இரவல
    யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
    உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
    கருங்கைக் கொல்லனை இரக்கும்
    திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே

    கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

    புறநானூறு

    மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
    கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
    கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
    பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
    புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளை
    வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
    உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
    இன்னே சென்மதி நீயே சென்று அவன்
    பகைப்புலம் படரா அளவை நின்
    பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

    புறநானூறு

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
    நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
    வெயிலென முனியேன் பனியென மடியேன்
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

    ஆவூர் மூலங்கிழார்

  • வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

    புறநானூறு

    வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
    கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
    கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
    மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
    உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
    செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
    மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
    வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
    எம்மால் வியக்கப் படூஉ மோரே
    இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
    குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
    புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
    சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
    பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே
    மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
    உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்
    நல்லறி வுடையோர் நல்குரவு
    உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்