Author: Pulan

  • இரங்கு முரசின் இனம் சால் யானை

    புறநானூறு

    இரங்கு முரசின் இனம் சால் யானை
    முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
    இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே
    நீயே முன்யான் அரியு மோனே துவன்றிய
    கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
    கழைக் கரும்பின் ஒலிக்குந்து
    கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
    கண் ணன்ன மலர்பூக் குந்து
    கருங்கால் வேங்கை மலரின் நாளும்
    பொன் னன்ன வீ சுமந்து
    மணி யன்ன நீர் கடற் படரும்
    செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
    சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை
    நீவா ழியர் நின் தந்தை
    தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே

    ஒருசிறைப் பெரியனார்

  • அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்

    புறநானூறு

    அறுகுளத்து உகுத்தும் அகல்வயல் பொழிந்தும்
    உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும்
    வரையா மரபின் மாரி போலக்
    கடாஅ யானைக் கழற்கால் பேகன்
    கொடைமடம் படுதல் அல்லது
    படைமடம் படான் பிறர் படைமயக் குறினே

    பரணர்

  • பாணன் சூடிய பசும்பொன் தாமரை

    புறநானூறு

    பாணன் சூடிய பசும்பொன் தாமரை
    மாணிழை விறலி மாலையடு விளங்கக்
    கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
    ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
    யாரீ ரோ என வனவல் ஆனாக்
    காரென் ஒக்கல் கடும் பசி இரவல
    வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
    நின்னினும் புல்லியேம் மன்னே இனியே
    இன்னேம் ஆயினேம் மன்னே என்றும்
    உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
    படா அம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ
    கடாஅ யானைக் கலிமான் பேகன்
    எத்துணை ஆயினும் ஈதல் நன்று என
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

    பரணர்

  • தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்

    புறநானூறு

    தடவுநிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
    மடவன் மன்ற செந்நாப் புலவீர்
    வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
    அடகின் கண்ணுறை ஆக யாம் சில
    அரிசி வேண்டினெம் ஆகத் தான் பிற
    வரிசை அறிதலின் தன்னும் தூக்கி
    இருங்கடறு வளைஇய குன்றத் தன்ன ஓர்
    பெருங்களிறு நல்கியோனே அன்னதோர்
    தேற்றா ஈகையும் உளதுகொல்
    போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே

    ஔவையார்

  • சுவல் அழுந்தப் பல காய

    புறநானூறு

    சுவல் அழுந்தப் பல காய
    சில் லோதிப் பல்இளை ஞருமே
    அடி வருந்த நெடிது ஏறிய
    கொடி மருங்குல் விறலிய ருமே
    வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன் மெய் கூறுவல்
    ஓடாப் பூட்கை உரவோர் மருக
    உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
    மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
    கனிபதம் பார்க்கும் காலை யன்றே
    ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
    சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
    இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
    அருஞ் சமம் வருகுவ தாயின்
    வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பே

    மருதன் இளநாகனார்

  • நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்

    புறநானூறு

    நாளன்று போடிப் புள்ளிடைத் தட்பப்
    பதனன்று புக்குத் திறனன்று மொழியினும்
    வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
    பாடு ஆன்று இரங்கும் அருவிப்
    பீடு கெழு மலையற் பாடி யோரே

    கபிலர்

  • நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்

    புறநானூறு

    நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
    யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
    தொலையா நல்லிசை விளங்கு மலயன்
    மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
    பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
    பட்ட மாரி உறையினும் பலவே

    கபிலர்

  • கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்

    புறநானூறு

    கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
    கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடே
    அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
    வீயாத் திருவின் விறல் கெழு தானை
    மூவருள் ஒருவன் ‘துப்பா கியர்’ என
    ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
    வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
    வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
    அரிவை தோள் அளவு அல்லதை
    நினது என இலைநீ பெருமிதத் தையே

    கபிலர்

  • ஆனினம் கலித்த அதர்பல கடந்து

    புறநானூறு

    ஆனினம் கலித்த அதர்பல கடந்து
    மானினம் கலித்த மலையின் ஒழிய
    மீளினம் கலித்த துறைபல நீந்தி
    உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
    சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
    நீயே பேரெண் ணலையே நின்இறை
    ’மாறி வா’ என மொழியலன் மாதோ
    ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
    கிளி மரீஇய வியன் புனத்து
    மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
    நின்னை வருதல் அறிந்தனர் யாரே

    மருதன் இளநாகனார்

  • மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

    புறநானூறு

    மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
    படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்
    கடாஅ யானைக் கலிமான் பேக
    பசித்தும் வாரோம் பாரமும் இலமே
    களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
    நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி
    அறம்செய் தீமோ அருள்வெய் யோய் என
    இ·தியாம் இரந்த பரிசில் அஃது இருளின்
    இனமணி நெடுந்தேர் ஏறி
    இன்னாது உறைவி அரும்படர் களைமே

    கபிலர்